கே.ஜி.எஃப் படத்தின் 3-ம் பாகத்துக்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கிவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள படம் 'கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யாஷ் நடிக்க, அவர் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்த படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகம் வட இந்தியாவிலும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
இந்தப் படத்தின் 3-ம் பாகம் பற்றி கடந்த சில நாட்களாக பேச்சு எழுந்துவருகிறது. ‘ரசிகர்கள் விரும்பினால் 3-ம் பாகத்தை கண்டிப்பாக உருவாக்குவோம்’ என்று இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியிருந்தார். இந்நிலையில், மூன்றாம் பாகத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கி விட்டதாக இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.
தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிக்கும் `சலார்' படத்தை இயக்கி வருகிறா, பிரசாந்த் நீல். இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் கே.ஜி.எஃப் 3 படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.