ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்க, வைரநகைகள் திருடிய பெண், டிரைவர் கைது: 1கோடியில் நிலம் வாங்கியது அம்பலம்

கைது செய்ப்பட்ட ஈஸ்வரி, ஓட்டுநர் வெங்கடேசன்
கைது செய்ப்பட்ட ஈஸ்வரி, ஓட்டுநர் வெங்கடேசன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்க, வைரநகைகள் திருடிய பெண், டிரைவர் கைது: 1கோடியில் நிலம் வாங்கியது அம்பலம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் பெண் பணியாளர் மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 100 சவரன் நகைகள்,30 கிராம் வைரநகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 1கோடி மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை போயஸ்கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா(41) வசித்து வருகிறார். கடந்த மாதம் வீட்டு லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் வைர நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்தார். குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு லாக்கரில் வைத்திருந்த நகைகளைத் திறந்து பார்க்கவில்லை எனவும் சிஐடி நகர், போயஸ்கார்டன், செயின்ட் மேரிஸ் சாலை ஆகிய மூன்று வீடுகளில் லாக்கரில் மாறி மாறி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் வீட்டில் பணிபுரியும் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் உட்பட மூன்று பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணப் பணபரிவர்த்தனை நடந்துள்ளது போலீஸாருக்குத் தெரியவந்ததை அடுத்து மந்தைவெளி பகுதியை சேர்ந்த பணியாளர் ஈஸ்வரி(40) மற்றும் திருவேற்காட்டைச் சேர்ந்த வெங்கடேசன்(44) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, ஈஸ்வரி கடந்த 18 ஆண்டுகளாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்ததும், வீட்டில் லாக்கர் சாவி இருக்கும் இடத்தை அறிந்து, கடந்த 2019-ம் ஆண்டு முதல் சிறுக சிறுக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் இருந்த நகைகளைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக ஈஸ்வரிக்கு மூன்று மகள்கள் உள்ளதாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக நகையைத் திருட முடிவு செய்து சிறுக சிறுக திருடி விற்பனை செய்து நிலம் வாங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் 1கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி இருப்பதும், கடனை 2 வருடங்களில் அடைத்துள்ளது தெரியவந்தது.

மேலும் திருட்டிற்கு ஈஸ்வரிக்கு உடந்தையாக கார் ஓட்டுநர் வெங்கடேசனும் இருந்ததும் அவருக்கும் திருடிய நகைகளில் பங்கு சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள்,30 கிராம் வைர நகைகள்,4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் திருடிய நகைகளில் வாங்கப்பட்ட 1கோடி மதிப்புள்ள நில ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் திருடப்பட்ட சில நகைகளை பிரபல ஜவுளி கடையில் விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை போலீஸார் கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in