
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்தப் படத்தைக் கைவிட்டது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.
மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் இந்த மாதம் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்தப் படத்தைக் கைவிட்டது ஏன் என்பது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெளிவுப்படுத்தியுள்ளார். ’கமல்ஹாசன் சார் தயாரிப்பில் நடிக்க இருந்தப் படத்தைக் கைவிட்டது எனக்கும் வருத்தம்தான். நான் இல்லை என்றாலும், அந்தப் படத்தை வேறு யாராவது வைத்து நடிக்க வைக்கலாம் என்றுதான் அவரிடம் யோசனை சொன்னேன். ஆனால், கமல் சார் ‘இது உங்களுக்கென்று எழுதப்பட்டக் கதை. நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும். என்றாக இருந்தாலும் இந்தக் கதை உங்களுக்காகக் காத்திருக்கும்’ என்று சொன்னார். அதனால்தான் அவர் தயாரிக்க இருந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது’ என பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
‘கண்ணை நம்பாதே’ படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படமே அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் கடைசிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.