ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது நெல்சன் திலீப்குமாரா, வெற்றி மாறனா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து ’அண்ணாத்த’ படம் கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியானது. சிவா இயக்கிய இந்தப் படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். டி.இமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம், ரஜினிகாந்தின் 168-வது படம்.
இதையடுத்து ரஜினியின் 169 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, வெற்றிமாறன், வெங்கட்பிரபு, நெல்சன் திலீப்குமார் உட்பட சில இயக்குநர்கள் கதை சொல்லி உள்ளனர். ஆனால், ரஜினி தரப்பிலிருந்து எந்த இயக்குநரையும் உறுதி செய்யவில்லை. இதனிடையே, ரஜினியின் அடுத்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது, ரஜினிக்காக, வெற்றிமாறன் உட்பட சிலர் கதை சொல்லி உள்ளனர். வெற்றிமாறன் கதையும் நெல்சன் கதையும் தயாரிப்பு தரப்புக்கும் ரஜினிக்கும் பிடித்திருப்பதாகவும் எதை ஓகே சொல்வது என்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ரஜினிகாந்த் இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.