நடிகர் சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்திருக்கும் புதிய படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது.
நடிகர் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு இயக்குநர் சிவா, சூர்யாவின் 42-வது படத்தை இயக்கி வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 42’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் தொடங்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், நாளை காலை 10 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் நிலையில் திஷா பட்டானி, யோகிபாபு, ரெடின் கிங்க்ஸ்லே, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதல் கட்டபடப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இரண்டாம் கட்டபடப்பிடிப்பு கோவாவில் இந்த மாதம் 13-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘அண்ணாத்த’ படத்திற்கு முன்பே சூர்யா, சிவா இணைவதற்கு பேச்சு வார்த்தை நடந்தது. ‘அண்ணாத்த’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்காததால் சூர்யா மறுபடி தன்னை அழைக்க மாட்டார் என இயக்குநர் சிவா நினைத்திருந்தார். ஆனால், கொடுத்த வாக்கிற்காக மீண்டும் சிவாவுடன் சூர்யா இணைந்திருக்கிறார்.
இதற்கிடையில் சூர்யா- பாலாவிற்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் தீராத காரணத்தால் தான் கடந்த மாதமே தொடங்க இருந்த ‘வணங்கான்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.