
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த சங்கத்தில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் என 2 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
தற்போதைய தலைவர் ஆர்.கே.செல்வமணியின் பதவிகாலம் முடிந்ததால், புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா காரணமாக, தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தாய் சத்யா பள்ளி வளாகத்தில், இந்த தேர்தல் இன்று நடக்கிறது. தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணை தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி தனித்தனி அணியாக போட்டியிடுகின்றனர். இயக்குநர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்படுகிறார்.