ஓட்டல் பில் செலுத்தாததால், விஷாலின் ‘லத்தி’ படக் குழுவினர், ஓட்டலில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விஷால் நடித்து சமீபத்தில் வெளியான படம், 'வீரமே வாகை சூடும்'. இதையடுத்து அவர் நடித்து வரும் படம், ’லத்தி’. இதை அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது.
இது விஷால் நடிக்கும் 32-வது படம். நடிகர்கள் நந்தாவும் ரமணாவும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வந்தனர். பீட்டர் ஹெய்ன் இந்தக் காட்சிகளை அமைத்தார்.
இந்நிலையில் திடீரென்று இந்தப் படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. இதனால் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள், தங்கி இருந்த ஓட்டலில் இருந்து சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தனர். ஆனால், ஓட்டல் நிர்வாகம் அவர்களை விடவில்லை.
’ஓட்டல் பில் இன்னும் பாக்கி இருக்கிறது. அதைக் கட்டினால்தான் உங்களை வெளியே விட முடியும்’ என்று கூறிவிட்டனர். இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட்டலிலேயே தங்கிவிட்டனர். ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு தயாரிப்பாளர் தரப்பில் ஓட்டல் பில் செலுத்தப்பட்டது. இதையடுத்து டெக்னீஷியன்கள் சென்னை திரும்பியுள்ளனர்.
விஷால் உள்ளிட்டோர் வேறு ஓட்டலில் தங்கி இருந்ததால், அவர்களுக்கு இந்த விவகாரம் தெரியாது என்கிறார்கள்.