மலையாள நடிகர் விநாயகன் தனது பாலியல் உறவு தொடர்பான கருத்துக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், சிறுத்தை, மரியான் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது நவ்யா நாயருடன் நடித்த ’ஒருத்தி’ படம் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், விநாயகன், மீ டூ புகார் பற்றி பேசினார்.
“மீ டூ என்றால் என்னவென்று புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்து கொள்வதுதான், மீ டூ வா? ஒரு பெண்ணைப் பார்க்கும் போது அவரை எனக்குப் பிடித்திருந்தால், அந்தப் பெண்ணிடம் நேரடியாகச் சென்று உறவு கொள்ள விருப்பமா என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் உறவு வைத்து கொள்வேன். இப்படி பத்து பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார். அப்போது, பெண் பத்திரிகையாளர் பக்கம் கையை நீட்டியும் அவதூறாகப் பேசியிருந்தார்.
விநாயகனின் இந்தக் கருத்து சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர் பேசியது பெண்களை அவமதிக்கும் செயல். தன் வார்த்தைகளுக்கு விநாயகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், நடிகர் விநாயகன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுபற்றி தனது ஃபேஸ்புக் பதிவில், ’ஒருத்தி’ பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக, அதன் தீவிரம் உணராமல் சில கருத்துகளைத் தெரிவித்துவிட்டேன். அதுதொடர்பாக ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’என்று தெரிவித்துள்ளார்.