நடிகை கொடுத்த பாலியல் புகாரில், போலீஸார் தேடி வரும் நடிகர், தான் பிசினஸ் டூரில் இருப்பதாக மெயில் அனுப்பியுள்ளார்.
மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் மலையாள நடிகை, கடந்த மாதம் 22-ம் தேதி போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, மார்ச் 13-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை, பலமுறை மயக்க மருந்துகளைக் கொடுத்து, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.
போலீஸார், விஜய் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவானார். அவர் துபாய் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் பாபு மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் கூறினார். இதுவும் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், இளம் நடிகை கொடுத்த பாலியல் புகாருக்கு ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள போலீஸார், சரணடைவதை தவிர விஜய் பாபுவுக்கு வேறு வழியில்லை என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் போலீஸாருக்கு மெயில் அனுப்பியுள்ளார், விஜய் பாபு. அதில், ``தான் பிசினஸ் டூரில் இருக்கிறேன். அதனால் உடனடியாக விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியவில்லை. மே 19-ம் தேதிதான் திரும்புகிறேன். பிறகு விசாரணைக்கு வருகிறேன்’' என்று கூறியுள்ளார்.
ஆனால் போலீஸார், உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பதில் அனுப்பியுள்ளனர். ஆனால், எங்கிருக்கிறார் என்ற தகவலை விஜய் பாபு தெரிவிக்கவில்லை.