`நல்ல விஷயத்துக்காக அனுமதி கேட்டு வந்துள்ளோம்'- குல தெய்வ கோயிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தரிசனம்

`நல்ல விஷயத்துக்காக அனுமதி கேட்டு வந்துள்ளோம்'- குல தெய்வ கோயிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தரிசனம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் குல தெய்வ வழிபாட்டிற்காக திருச்சி சென்றுள்ளனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இருவருக்கும் அடுத்த மாத தொடக்கத்தில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' பட நேரத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டிகளில், முன்பு இதன் கதை குறித்து நயன்தாராவுடன் பேசும் பொழுது இந்த படம் எடுத்து முடித்த பின்னரே திருமணம் என்று பேசியதாகவும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இப்போது இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கு நன்றி செலுத்தும் விதமாக திருப்பதி சென்ற விக்னேஷ்- நயன்தாரா ஜோடி அங்கு அடுத்த மாதம் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் எனவும் சொல்லப்பட்டது. அதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் இந்த ஜோடி தரிசனம் செய்ய இருப்பதாகவும் சினிமா துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று திருச்சியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'வாழ்க்கையில் நடக்க இருக்கும் நல்ல விஷயங்களுக்காக கடவுளின் தரிசனத்திற்காக அனுமதி கேட்டு வந்துள்ளோம்' என்று நெகிழ்ச்சியாக சாமிக்கு பூஜை நடக்கும் வீடியோவை பகிர்ந்து இதைத் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் திருமண வேலைகள் காரணமாக அவர் இந்த வருடத்திற்கான கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளவில்லை எனவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in