இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரது கூட்டணியில் உருவாக இருந்தத் திரைப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமல்லாது, தயாரிப்பாளராகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். அந்த வகையில், அவர் திரைக்கதை எழுதி தயாரிக்க இருந்த படம் ‘அதிகாரம்’. ராகவா லாரன்ஸ் இதில் கதாநாயகனாக நடிக்க, ‘எதிர்நீச்சல்’ படப்புகழ் துரை செந்தில்குமார் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது இந்தப் படம் டிராப் ஆகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்தப் பட வேலைகள் முடிந்ததும் அடுத்து சூர்யாவுடன் ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்கி விடுவார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை நயன்தாரவின் 81-வது படத்தை ‘ரெளடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ராகவா லாரன்ஸ் படம் கைவிடப்பட்டது கிட்டத்தட்ட உறுதி எனவும் சொல்லப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸூம் ‘ருத்ரன்’ உள்ளிட்ட அவருடைய மற்றப் படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.