
பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.
பிரபல குணசித்திர நடிகை கே.ஆர்.ரங்கம்மாள் என்ற ரங்கம்மா பாட்டி. எம்.ஜி.ஆரின் 'விவசாயி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். வடிவேலு, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்களுடன் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். வடிவேலுவுடன், ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் பாட்டியாக இவர் நடித்த காமெடி காட்சிகள் வரவேற்பைப் பெற்றன.
சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், பல நடிகை களுக்கு ’டூப்’பும் போட்டுள்ளார். கண்ணதாசனின் பிரபல பாட லான, ’பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதா அருகில் அமர்ந்திருப்பது இவர்தான். கடந்த சில வருடங்களாக, வாய்ப்பில்லாமல் வறுமையில் இருந்தார். இதனால், மெரினா கடற்கரையில் கர்சீப், சோப்பு, பொம்மைகள் விற்று வந்தார். தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்றும் அப்போது கோரிக்கை விடுத்ததை அடுத்து சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.
இந்நிலையில், வயோதிகம் மற்றும் வறுமை காரணமாக, அவருடைய சொந்த ஊரான, கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப்பாளையத்துக்குச் சில வருடங்களுக்கு முன் சென்றார். அங்கு கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், இன்று காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.