சிம்புவுடன் நடிக்கும்போது பயமும் பதற்றமும் இருந்தது!

‘வெந்து தணிந்தது காடு’ சித்தி இத்னானி நேர்காணல்
சித்தி இத்னானி
சித்தி இத்னானிVikas KV

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதாநாயகி ‘பாவை’யாக தமிழ் சினிமாவுக்கு சித்தி இத்னானி நல்வரவு. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கம், கதாநாயகன் சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் இசை என அறிமுகப் படத்திலேயே ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புடன் வந்திருக்கும் சித்தியுடன் காமதேனு இணையதளத்திற்காக நடத்திய நேர்காணலில் இருந்து....

’வெந்து தணிந்தது காடு’ படத்தி கதாநாயகி நீங்கள் தான் என அறிவிக்கப்பட்டதும் நிறைய பேருக்கு நீங்கள் யார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது. உங்களை பற்றி சொல்லுங்கள்?

Vikas KV

நான் மும்பையில் பிறந்து வளர்ந்த பொண்ணு. அம்மா டெலிவிஷன் ஆக்டரஸ். அப்பா, வாய்ஸ் மாடுலேஷன் ட்ரைய்னர். ஒரு நாள் நாமும் பெரிதாக எதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு சின்ன வயதிலிருந்தே உண்டு. தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கிய பின்பு குஜராத்தியில் சில படங்கள் நடித்தேன். இப்போது தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு தமிழ் படங்கள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் ரஜினி, கமல் இவர்கள் குறித்து தெரியும்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் உங்களுக்கு ஆடிஷன் வைத்த உடனேயே தேர்ந்தெடுத்துவிட்டார்களாமே... அந்தக் கதையைச் சொல்லலாமா?

Vikas KV

என்னுடைய மேனேஜர் எனக்கு கால் செய்து நாளை ஒரு ஆடிஷன் சென்னையில் இருக்கிறது என்று சொன்னார். காலை 4 மணிக்கு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். அன்று மாலையே என்னை தேர்ந்தெடுத்துவிட்டார்கள். என்னுடைய முதல் ஷாட் சிம்புவுடன் தான். முதல் டேக்கே ஓகே ஆகிவிட்டது.

சிம்பு சார் போல ஒரு பெரிய நடிகர் முன்னால் நடிக்கும் போது பயம், பதற்றம் எல்லாமே இருந்தது. பிறகு இயல்பானதும் ‘மாநாடு’ படத்தின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். அவரும், என்னிடம் அமைதியாக, “உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி நடியுங்கள்” என்றார்.

படத்தில் உங்களுக்கு சவாலாக இருந்த ஒரு காட்சி என்றால் எதைச் சொல்வீர்கள்?

க்ளைமாக்ஸ் காட்சியை சொல்வேன். நிறைய எமோஷன் அந்த காட்சியில் இருக்கும். இந்தப் படத்தில் க்ளைமாக்ஸ் முக்கியமான ஒன்று என படம் பார்த்தால் தெரியும். க்ளைமாக்ஸில் வரும் எமோஷனுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடிப்பது என்பது எனக்கு சவாலாக இருந்தது. ஒரு பக்கம், சிம்பு தீவிரமாக நடித்து வருகிறார் எனும்போது என்னுடைய போர்ஷனை அந்த இடத்தில் சரியாகச் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

படத்தில் அதிகம் ஆக்‌ஷன், வன்முறை இருக்கும் போது, படப்பிடிப்புத் தளம் எப்படி இருந்தது... சிம்பு என்ன சொன்னார்?

சிம்புவிடம் அதிகம் நான் பேசியிருக்கிறேன். இந்தப் படத்திற்காக அவரது உடல் தோற்றத்தில் நிறைய வித்தியாசம் காட்ட வேண்டும். அதனால், டயட் போன்ற விஷயங்களில் அதிக டிப்ஸ் கொடுத்தார். நடிப்பு, ரசிகர்களின் அன்பு குறித்தெல்லாம் பேசினார்.

அடுத்து என்ன படங்கள்?

தமிழில் நிறையப் படங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் என்னை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இயக்குநர் சசியுடைய ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடித்திருக்கிறேன். இதில்லாமல், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் எதிர்பார்த்து இருக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in