பிரபல நடிகைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு இப்போது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,528 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,340 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அரசியல்வாதிகளும், நடிகர், நடிகைகளும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தன்னைச் சந்தித்தவர்கள் மற்றும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
’’எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும். கரோனா தொற்று நம்மை விட்டு இன்னும் செல்லவில்லை. அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.