பிரபுதேவா நடிக்கும் ’ரேக்ளா’ படத்தில் வாணி போஜன் செவிலியராக நடிக்கிறார்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப்படம் 'ரேக்ளா'. இதில், பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். 'வால்டர்' இயக்குநர் அன்பு இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பிரபுதேவாவின் 58-வது படமான 'ரேக்ளா'வின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் வாணி போஜன்.
இதுபற்றி இயக்குநர் அன்பு கூறும்போது, “படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார். இப்போதைக்கு வாணி போஜன் மட்டும் முடிவாகி இருக்கிறார். மற்றொரு நாயகி யார் என்று இன்னும் முடிவாகவில்லை. வாணி, சிறந்த நடிகை. ‘ஓ மை கடவுளே’ உட்பட பல படங்களில் அவருடைய யதார்த்தமான நடிப்பைப் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் அவர் நர்ஸாக நடிக்கிறார். கதைக்கு முக்கியமான கேரக்டர். இந்தப் படம் ரேக்ளா ரேஸ் பற்றி பேசவில்லை. கதைப்படி பிரபுதேவா ரேக்ளா காளைகளைப் பராமரிப்பவர் என்பதால் படத்துக்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறோம்” என்றார்.