"சில படங்கள் பண்ணி இருந்தாலும், காமெடி கதாபாத்திரத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ள, எனக்கு பெரிய வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது" என்று `வள்ளி மயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் நடிகை அறந்தாங்கி நிஷா பேசினார்.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் `வள்ளி மயில்'. படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், "சில படங்கள் பண்ணி இருந்தாலும், காமெடி கதாபாத்திரத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ள, எனக்கு பெரிய வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. கலைஞர்களின் பரிந்துரைகளுக்கு மரியாதை கொடுப்பவர் இயக்குநர். எனக்கு அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும். விஜய் ஆண்டனி சார் மற்ற கலைஞர்களை பாராட்டும் குணம் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கு ப்ரியா எனும் சிறந்த நடிகை இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளார். வள்ளி மயில் திரைப்படம் நாடக கலைஞர்களை போற்றும் ஒரு படமாக இருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
நடிகை ப்ரியா அப்துல்லா பேசுகையி்ல், "நான் தியேட்டர் கலைஞராகதான் என் பயணத்தை தொடங்கினேன். சுசீந்திரனுடைய பொறுமை தான், இந்த கதை சிறப்பாக உருவாக காரணம். அவர் என்னிடம் கதை சொல்லும்போதே மியூசிக் எல்லாம் போட்டுக்காட்டினார். நான் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பித்தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டுள்ளேன். இந்த கதை நிச்சயம் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை" என்றார்.