
ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த 17ம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தனது வாகனத்தில் முன் சக்கரத்தை தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்த போது, அவரது வாகனம் தலைகீழாக இருமுறை சுழன்றது. டிடிஎஃப் வாசன் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் டிடிஎஃப் வாசன். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தபோது டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.