
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழா 2023 நடைபெற்றது. ஜனவரி 6-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விழாவினை தொடங்கி வைத்தார். இவ்விழா நேற்று நிறைவடைந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் பங்கேற்றார்.
அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் 'ஓடிடி வருகைக்குப் பின் நாம நினைச்ச மாதிரி படம் எடுக்கக்கூடிய சுதந்திரம் இருக்கிறது என நீங்கள் உணர்கிறீர்களா?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிக சுதந்திரம் காணப்பட்டது போல தோன்றியது. ஆனால் நான் இப்போது சொல்றேன். தியேட்டர்களில் படம் வெளியிடுவதில் உள்ள சுதந்திரம் எதிலும் இல்லை" என வெற்றிமாறன் தெரிவித்தார்.
கூடவே ‘ஓடிடியில் படத்தை கொடுப்பதால் நாம் செலவு செஞ்ச பணம் திரும்ப கிடைச்சுடும். அதேசமயம் ஒரு படத்தைத் தியேட்டரில் வெளியிட்டால் அந்த படம் முதலீடு செய்ததற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பணம் கிடைக்க வழி செய்யும். ஆனால், இன்னும் கொஞ்சநாள் கழித்து ஓடிடி தளங்கள் நம்மிடம் இப்படித்தான் படம் வேண்டுமென நிபந்தனை விதித்தால், நாம் அதை நோக்கி நகர்வோம். இதனால் நமது படைப்பு சுதந்திரம் பறிக்கப்படும். அந்த மாதிரி நிலை வரக்கூடாது என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.