தேநீர் நேரம் - 12: கருணாநிதி கலைஞர் கருணாநிதி ஆனது இப்படித்தான்!

அண்ணாவுடன் கருணாநிதி
அண்ணாவுடன் கருணாநிதி

வி.சி.கணேசனை ‘சிவாஜி கணேசன்’ என்று மாற்றியது பெரியார் என்று பார்த்தோம். அதேபோல வேறு சில ஆளுமைகளுக்கும் அவர்களுக்குரிய சிறப்புப் பெயர்களை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு மனிதர்கள் சூட்டியிருக்கிறார்கள் என்பதெல்லாம் நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதா

நாடகமேடைகளில் தனக்கு நிகரில்லாமல் கோலோச்சிக்கொண்டிருந்த எம்.ஆர்.ராதாவுக்கு ‘ராஜசேகரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது. 1937-ல் வெளிவந்த இந்தப் படத்தை ஆர்.பிரகாஷ் இயக்கினார். அவர் மேலை நாடுகளுக்குச் சென்று திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்றுவந்தவர். அவர்தான் முதன்முதலில் ராதாவுக்கு சினிமா வாய்ப்பளித்தார். ‘ராஜசேகரன்’ படத்தில் இ.ஆர்.சகாதேவன் கதாநாயகன். எம்.ஆர்.ராதா வில்லன். இந்தப் படத்துடன் ‘ஏமாந்த சோனகிரி’ என்றொரு படத்தையும் இணைத்துத் திரையிட்டார்கள்.

‘ராஜசேகரனில்’ நடித்த மற்ற எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நடிப்பில் ரசிகர்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்தார் ராதா. ஆலிவுட்டின் ‘டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ்’ போல அவரது நடிப்பு இருந்ததால் ‘இண்டியன் டக்ளஸ்’ என்ற வாசகத்துடன் அவரது படங்கள் போட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அது அவருக்குப் புகழ் சேர்த்தாலும் படம் வெற்றிபெறவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. இந்தச் சூழலில் ராதாவுக்கும் சினிமா கசந்தது.

தனது சொந்தப் படைப்புத்திறனை வெளிப்படுத்த தாராளமாக இடமளித்த நாடக உலகிற்கே மறுபடியும் திரும்பினார் எம்.ஆர்.ராதா. யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக்குழுவிற்கு வந்துவிட்டார். தந்தை பெரியார் மீது ஈடுபாடு கொண்டு, 1943-ல் ‘திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார் ராதா. முகப்புத் திரைச்சீலையில், ‘உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்தையும் எழுதி வைத்தார்.

துணிச்சலோடு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள் வாயிலாகச் சொல்லிவந்தார் எம்.ஆர்.ராதா. அப்போது யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை ‘இழந்த காதல்’, ‘விமலா அல்லது விதவையின் கண்ணீர்’ ஆகிய இரண்டு நாடகங்களை நடத்திவந்தார். ராதா இந்த இரண்டு நாடகங்களையும் பார்த்தார். இதில் இன்னும் கொஞ்சம் செலவு செய்து அரங்க அமைப்புகளையெல்லாம் மாற்றி சற்றே மேம்படுத்தி நடத்தினால் நாடகம் இன்னும் சிறப்பாக வசூலைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று ராதாவுக்குத் தோன்றியது. பொன்னுசாமிப் பிள்ளையிடம் அதைச் சொன்னார். அத்துடன் அதில் வரும் வில்லன் ஜெகதீஷ் வேடத்தில் தானே நடிக்கிறேன் என்றும் சொன்னார். சொன்னவுடன் பொன்னுசாமிக்குப் பிடித்துவிட்டது. ராதா சொன்ன மாற்றங்களை உடனே மேற்கொள்ள ஒப்புக்கொண்டார்.

டி.ஆர்.சுந்தரம்
டி.ஆர்.சுந்தரம்

சேலத்தில் நியூஓரியண்டல் தியேட்டரில் புத்தம்புதுப் பொலிவுடன் அரங்கேறியது ‘இழந்த காதல்’. பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆறு மாதகாலம் நடந்து நாடகவுலகில் புதிய சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல... இந்த நாடகம் ஓடாத ஊரே தமிழகத்தில் இல்லை எனும் பெருமைக்குரிய நிலை ஏற்பட்டது. எம்.ஆர்.ராதாவின் நடிப்பை ‘ராஜசேகரனில்’ பார்த்து ரசித்தவர் மாடர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர்.சுந்தரம். அவர் தயாரிப்பில் உருவான ‘சந்தனதேவன்’, ‘சத்தியவாணி’ ஆகிய படங்களில் ராதாவுக்கு விரும்பி வாய்ப்பளித்தார்.

மதராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்று அறியப்பட்டிருந்த ராதாவின் பெயரை எம்.ஆர்.ராதா என்று சுருக்கி வைத்தவர் டி.ஆர்.சுந்தரம்தான் என்று ஒரு செய்தியும் உண்டு. எனினும் ராதா நடித்த அந்த இரு படங்களும் பெரிய வெற்றிபெறவில்லை. எனவே, ராதா நாடகத்தில் இன்னும் கவனம் செலுத்தினார். ‘சரஸ்வதி கான சபா’ என்றொரு நாடகக் குழுவைத் தொடங்கினார். ‘இழந்த காதல்’ நாடகத்தை அதில் நடத்தினார். சரிவர வசூல் இல்லை. பின்னர் ‘மதுரை மங்கள பாலகான சபா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் கம்பெனியில் வாரம் இரண்டு நாட்கள் பி.எஸ்.ஞானத்துடன் இணைந்து நடித்துவந்தார் ராதா.

அப்போதுதான் அவர் மேற்சொன்ன திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றத்தைத் தொடங்கினார். பெரியாரின் கொள்கைகளைப் பேசியதால் ராதாவின் நாடகங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். சண்டைகளும் சலசலப்புகளும்கூட அவ்வப்போது நடக்கத் தொடங்கின. கலவரங்களின்போது படுதாவை இழுத்துவிட்டு, மேடையில் மைக் முன்னே ராதா தோன்றிவிடுவார்.

அப்போது இப்படிப் பேசுவார்: "யார் கலாட்டா செய்வது? உங்களுக்கு நாடகமோ அல்லது அதில் சொல்லப்படுகிற விஷயமோ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தந்த பணத்தைத் திருப்பி வாங்கிக்கொண்டு வெளியேறிவிடுங்கள். தேவையின்றி மக்களுக்குத் தொல்லை தராதீர்கள்" - என்பார்.

மேலும் சொல்வார்: "நான்தான் சீர்திருத்த நாடகம் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறேனே. அதைப் பார்த்துவிட்டுத்தானே நாடகத்திற்கு வந்தீர்கள்? அப்படியானால் நான் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும். இல்லையேல் கிளம்புங்கள். நேரத்தை வீணாக்க வேண்டாம். என் உயிர் உள்ளவரையில் என் கருத்தை நான் சொல்லிக்கொண்டேயிருப்பேன். உங்கள் மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என் கொள்கைகளிலிருந்தும் நான் விலகமாட்டேன். எனக்கு நீங்கள் தடை விதிக்க முடியாது. அதற்கு உங்களுக்கு உரிமையுமில்லை..!" - என்று கறாராகச் சொல்லிவிடுவார்.

கூட்டம் சத்தமின்றி அடங்கிவிடும். பெரியாரின் கொள்கைகளின் அடிப்படையில் உருவானதுதான் சி.பி.சிற்றரசு எழுதிய ‘போர்வாள்’ நாடகம். தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாடகம் இது. பல இளைஞர்களும் பெரியவர்களும் இந்த நாடகத்தைப் பார்த்த பின்னர் தங்களை திராவிடர் கழகத்தில் இணைத்துக்கொண்டதாக பெரியாரே மகிழ்ந்து சொல்லியிருக்கிறார். “நான் நடத்தும் நூறு மாநாடுகளும் சரி, ராதா நடத்தும் ஒரு நாடகமும் சரி” என்றார் பெரியார் பெருமிதத்தோடு.

“தமிழகத்தில் எதிர்காலத்தில் அமையப்போகிற பகுத்தறிவு ஆட்சிக்கு ராதாவின் நாடகங்கள்தாம் அஸ்திவாரமாய் அமையும்” என்றார் அறிஞர் அண்ணா. அவர்களைப்போலவே ராதாவின் நாடகங்களின் இன்னொரு ரசிகர்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள். ராதாவின் விருப்பப்படி கலைஞர் எழுதிய நாடகம்தான் ‘தூக்குமேடை’. அதில் ராதாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர் தலைவராக கருணாநிதியும் நடித்தார். அந்த நாடகமும் தமிழ்நாட்டில் பெரும் புரட்சியை உண்டுபண்ணியது.

பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் இந்த நாடகத்துக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய ராதா, "நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நாடகத்தை எழுதி, அதில் நடித்தும் சிறப்பித்த இவரை நான் இன்றுமுதல் அறிஞர் என்ற பட்டப்பெயருடனேயே அறிஞர் கருணாநிதி என்றே அழைக்க விரும்புகிறேன்" என்றார்.

இதைக் கேட்டு விருட்டென எழுந்த கருணாநிதி, "இல்லை... அறிஞர் என்றால் அது அண்ணா மட்டும்தான்" என்றார். ராதா விடாமல், "சரி, பேரறிஞர் கருணாநிதி என்று அழைக்கட்டுமா?" - என்றார். அப்போதும் குறுக்கிட்ட கருணாநிதி, "அண்ணாவைவிட நான் எதிலும் உயர்ந்தவனில்லை!" என்றார்.

"அப்படியானால் நான் கலைஞர் கருணாநிதி என்று அழைக்கட்டுமா?" என்றதுதான் தாமதம், கூட்டத்திலிருந்த தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். கைதட்டி வரவேற்றார்கள். அன்றிலிருந்துதான் அவர் கலைஞர் கருணாநிதி என்று உலகின் நாவுகளெல்லாம் உச்சரிக்கும் திருப்பெயர் பெற்றார். அதுபோல ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தைப் பார்த்து வியந்த பட்டுக்கோட்டை அழகிரிதான் எம்.ஆர்.ராதாவை ‘நடிகவேள்’ என்று சிறப்புப் பெயர் சூட்டி அழைத்தார்.

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

அண்ணாவுடன் கருணாநிதி
தேநீர் நேரம் - 11: பால் கிளாஸுடன் வந்து பதறவைத்த எம்ஜிஆர்!

வீடியோ வடிவில் காண:

அண்ணாவுடன் கருணாநிதி
தேநீர் நேரம்:12 கருணாநிதி கலைஞர் கருணாநிதி ஆனது இப்படித்தான்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in