
இன்று முதல் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் 30 ரூபாய் வரை சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் இரண்டு ஆண்டு வரை மூடப்பட்டன. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த 2020 அக்டோபர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், ரசிகர்கள் வருகை குறைவாக இருந்ததால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. ரூ.120 டிக்கெட் ரூ.100 ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75 ஆகவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு மனு அளித்தனர். இதனை ஏற்று கட்டண உயர்வுக்கான உத்தரவை ஆட்சியர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, 3-ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், 2-ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், முதலாம் வகுப்பு 100 ரூபாயில் இருந்து 130 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பால்கனி டிக்கெட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. 160 ரூபாய் என இருந்த பாக்ஸ் டிக்கெட் 180 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ரூபாய் அதிகபட்சம் 30 ரூபாய் என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று, முதல் அமலுக்கு வந்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.