தான் இயக்கும் 'த வாரியர்' படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில், தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கிறார். இதில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். இவர், தெலுங்கில் உப்பென்னா, ஷியாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மற்றும் ஆதி, அக்ஷரா கவுடா உட்பட பலர் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக ஹைதராபாத்தில் நடந்து வந்தது. தற்காலிகமாக 'ரேபோ-19’ என்று தலைப்பு வைத்திருந்தனர்.
இந்நிலையில், தலைப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. படத்துக்கு ’த வாரியர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ராம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “த வாரியர் படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது. கோவிட் காலகட்டத்தில் போலீஸ்காரர்களை முன்களப் பணியாளர்கள் என்றார்கள். இந்தப் படத்தின் டைட்டில் அதை பிரதிபலிப்பதாகவும் இருக்கும். ஏன் 2 மொழிகளில் இயக்குகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். எனது முந்தையை படங்கள் எல்லாமே தெலுங்கிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் என்றால், 2 மொழிக்கும் தனித்தனியாக படமாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.