`நம்பி ரூ.5 கோடி கொடுத்தேன், ஏமாற்றிவிட்டார்'- நடிகர் விமல் மீது பட தயாரிப்பாளர் புகார்

`நம்பி ரூ.5 கோடி கொடுத்தேன், ஏமாற்றிவிட்டார்'- நடிகர் விமல் மீது பட தயாரிப்பாளர் புகார்

5 கோடி ரூபாய் ஏமாற்றியதாக நடிகர் விமல் மீது பட தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை பெரவலூர் பகுதியை சேர்ந்தவர் கோபி(43). தொழிலதிபரான இவர் அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றார். நடிகர் விமல் 5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக தயாரிப்பாளர் கோபி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் விமல் தன்னை அணுகி, `மன்னர் வகையறா' திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவுமாறு கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பட வெளியாவதற்கு முன்னரே லாபத்துடன் கடன் தொகையை திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி நடிகர் விமலிடம் 5 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அதற்கான ஒப்பந்தம் போட்டு கொண்டதாக தெரிவித்துள்ள அவர், `மன்னர் வகையறா' படம் வெளியாகி நல்ல லாபம் கிடைத்த போதிலும், தன்னிடம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். பல மாதங்கள் கழித்து 1.30 கோடி கடனை திருப்பி கொடுத்த நடிகர் விமல், மீதி தொகையை 6 மாதத்திற்குள் தருவதாக தெரிவித்தார். பின்னர் பொய்யான காரணங்களை கூறி விருகம்பாக்கத்தில் தன்மீது விமல் புகார் அளித்ததாகவும், அதனை தொடர்ந்து விமலுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இறுதியாக 3 கோடி ரூபாய் தருவதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் விமல் குறிப்பிட்டதுபோல் இன்று வரை பணம் தராமல் ஏமாற்றி வருவதாகவும், இது குறித்து விமலிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களாக 5 கோடி ரூபாய் தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்கும்படி புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in