தமிழக ரசிகர் ஒருவர், தனக்கு கோயில் கட்டி இருப்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'மல்லுக்கட்டு', 'கந்தர்வன்' உள்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை ஹனி ரோஸ். இவர் ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடித்த படம் 'பட்டாம்பூச்சி'. பத்ரி இயக்கிய இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது.
தெலுங்கிலும் நடித்து வரும் இவர், சமீபத்தில் தமிழக ரசிகர் ஒருவர், தனக்கு கோயில் கட்டி இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது முதல் படமான ’பாய் பிரண்ட்’ காலத்தில் இருந்தே பாண்டி என்ற ரசிகர் என்னுடன் போனில் பேசி வருகிறார். என் படங்கள் ரிலீஸ் ஆனால் உடனடியாகப் பார்த்துவிட்டு பாராட்டுத் தெரிவிப்பார்.
இப்போது அவர் எனக்குக் கோயில் கட்டி இருக்கிறார். என் பிறந்த நாளுக்கு அவர் பாயாசம் வழங்கி வருகிறார். இவ்வளவு வருடமாக ரசிகர் ஒருவர் என்னை தொடர்வது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு ஹனிரோஸ் கூறியுள்ளார்.
ஆனால், அந்த ரசிகர் எந்த ஊரில் கோயில் கட்டியுள்ளார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.