கோயிலுக்குச் செல்லும் வழியில் பிரேக் பிடிக்காமல், கார் விபத்துக்குள்ளானதில் பிரபல நடிகை படுகாயமடைந்தார்.
தமிழில் விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நாயகியாக நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், பிரபல நடிகர் நானா படேகர் மீது மீடு புகார் கூறியிருந்தார். இது சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கு மும்பையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அவர் மத்திய பிரதேச மாநிலம் மஹாகாளேஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது கார் பிரேக் பிடிக்காததால் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். கோயிலில் நிற்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், கடைசி புகைப்படத்தில் காலில் பலத்த காயத்துடன் நிற்கிறார். ‘இன்று சாகச நாளாகிவிட்டது. ஆனாலும் கடைசியில் மஹாகாள் தரிசனம் கிடைத்தது. கோயிலுக்கு வரும் வழியில், காரில் பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்துவிட்டது. காலில் காயம். சில தையல்களுடன் தப்பித்துவிட்டேன். ஜெய்ஸ்ரீ மஹாகாள்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ரசிகர்களும் அவருடைய நெருங்கிய நண்பர்களும் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.