காவல் துறை அகாடமியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ’டாணாக்காரன்’ படம் உருவாகியுள்ளது என்று அதன் இயக்குநர் தமிழ் கூறினார்.
விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடித்துள்ள படம், ‘டாணாக்காரன்’. லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மாயா’, ’மாநகரம்’ ஆகிய படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தமிழ் இயக்கியுள்ளார். இவர் ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ படங்களில் நடித்தவர். படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.
படம் பற்றி பேசிய இயக்குநர் தமிழ், “காவல் துறை அகாடமியில் நடக்கும் சம்பவங்கள் அடங்கிய இந்தக் கதை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. காவல் துறை பயிற்சிக்குச் செல்லும் ஒருவனுக்கும், அங்குள்ள உயர் அதிகாரி ஒருவருக்குமிடையே அதிகார மோதல் எழுகிறது. அதைச் சமாளித்து அவன் எப்படி காவல் அதிகாரி ஆகிறான் என்பதே கதை. 97 பேட்ச்சில் நடக்கும் காவலர் பயிற்சியை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளோம். டாணாக்காரன் என்றால் போலீஸ்காரன். இந்தியாவில் போலீஸ் பயிற்சி பற்றி எந்தப் படமும் வரவில்லை. இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்” என்றார்.