விஜய் ஆண்டனி நடிக்கும் ’வள்ளி மயில்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கும் படம், ’வள்ளி மயில்’. காமெடி ஆக்ஷன் த்ரில்லர் படமான இது, 1980 களில் புகழ் பெற்ற ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு உருவாகிறது.
விஜய் ஆண்டனி நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். சத்யராஜ், பாரதிராஜா, தெலுங்கு நடிகர் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி. முத்து முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
திண்டுக்கல் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்காக, ஒரு கோடி செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. 1980 காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது.