சூர்யா கதாபாத்திரம்தான் 'விக்ரம்3’ ன் தொடக்கம் - கமல் சொல்லும் சீக்ரெட்

சூர்யா கதாபாத்திரம்தான் 'விக்ரம்3’ ன் தொடக்கம் - கமல் சொல்லும் சீக்ரெட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கக்கூடிய திரைப்படம் 'விக்ரம்'. இந்த திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து, நடிகர் கமல்ஹாசன் பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊடகம் ஒன்றிற்கு இன்று அளித்த பேட்டி ஒன்றில், “லோகேஷ் கனகராஜ் முதலில் படத்தின் ஒரு வரி கதை சொன்னபோதே பிடித்துவிட்டது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை டெவலப் செய்தார். திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்காக கடைசி நேரத்தில் தான் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், அவர் உடனே ஒத்துக்கொண்டு இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடைய கதாபாத்திரம் தான் 'விக்ரம்' படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும்” என்று கூறினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என திறமையான நடிகர்கள் இருக்கும்போது உங்களுக்கு போட்டி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "நிச்சயமாக திறமையானவர்கள் யார் என்னுடன் நடித்தாலும் அவர்களை என்னுடைய போட்டியாக தான் பார்ப்பேன்” என்று கூறினார்.

பழைய 'விக்ரம்' படத்திற்கும் இந்தப் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “பழைய 'விக்ரம்' படத்தில் உள்ள ஒரு சம்பவம் இந்த புதிய 'விக்ரம்' படத்திலும் இருக்கும். அது ஒன்று மட்டுமே பழைய விக்ரமுக்கும் இப்போதுள்ள விக்ரமுக்கும் உள்ள தொடர்பு” என்று கூறினார் கமல்.

'பத்தல பத்தல' பாடலின் அரசியல் வரிகள் சர்ச்சைக்குள்ளானது பற்றிய கேள்விக்கு, “நான் எப்போதும் சினிமாவையும், அரசியலையும் பிரித்ததில்லை. என்னுடைய பல படங்களிலும் வெளிப்படையாகவே அரசியல் பேசி இருக்கிறேன்” என்று சொன்னார் கமல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in