
'காளி' ஆவணப்பட போஸ்டர் விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை. இவர் தான் இயக்கி வந்த ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் உள்ளதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தன் மீது பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் லீனா மணிமேகலை. அதில், பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளால்தான் கைது செய்யக்கூடும் என்றும் தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லீனா மணிமேகலைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்ய இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், மணிமேகலைக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளில் எவ்வித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் கூடுதலாக எப்ஐஆர் புதியதாக பதியப்பட்டாலும் அதிலும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.