சுகுமாரி: மலையாளத்தின் மனோரமா!

நடிகை சுகுமாரி பிறந்தநாளில் சில நினைவுகள்
நடிகை சுகுமாரி
நடிகை சுகுமாரி

திரையில் தோன்றுபவர்கள் அனைவரையும் நடிகர்கள் என்றும் நடிகைகள் என்றும் சொல்லுகிறோம். ஆனால், எந்தக் கதாபாத்திரமாகவும் அதற்குப் பொருந்திவிடுகிற, தன்னை அப்படியே பொருத்திக்கொள்கிறவர்கள்தான் உண்மையான நடிகர்கள்; நடிகைகள்! அன்பும் கருணையுமான கதாபாத்திரங்களானாலும் படபடவென பட்டாசாகப் பொரிந்து தள்ளுகிற கொடுமைக்கார வேடங்களாக இருந்தாலும் அவற்றில் தன் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து, அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறவர்தான் நடிகை சுகுமாரி!

சுகுமாரியைச் சொல்ல வேண்டும் என்றால் லலிதா, பத்மினி, ராகினியையும் சொல்லியாக வேண்டும். திருவிதாங்கூர் சகோதரிகளான இந்த மூவரின் அம்மா, சுகுமாரிக்கு அத்தை. அதாவது நாட்டியப் பேரொளி பத்மினி, லலிதா, ராகினி ஆகியோர் சுகுமாரிக்கு அத்தை மகள்கள். ஆக, கலை, நடனம் என்பதெல்லாம் இந்தக் குடும்பத்துக்கு ரத்த சொந்தம். நாகர்கோவிலில் பிறந்த சுகுமாரி, அத்தையின் அரவணைப்பில்தான் வளர்ந்தார்.

சிறுவயதிலேயே நடனத்திலும் பயிற்சி பெற்றவர் சுகுமாரி. நாடகங்களிலும் நடித்து வந்தார். அறிஞர் அண்ணாவின் திரைக்கதையில் உருவான ‘ஓர் இரவு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தன. அதேபோல், பாடலுக்கு நடனம் ஆடுவதற்கும் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

அண்ணன் - தங்கை பாசத்துக்கு உதாரணமாகத் திகழும் ‘பாசமலர்’ படம் படத்தில் சுகுமாரியும் தலைகாட்டினார். இப்படத்தில் இடம்பெற்ற, ‘வாராயோ தோழி வாராயோ’ பாடல் ஒலிக்காத கல்யாண வீடுகளே இல்லை. மிக அழகாக, ஏராளமான நடனக்கலைஞர்களைக் கொண்டு படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலுக்கு ஆடியவர்களில் சுகுமாரியும் ஒருவர்.

தொடர்ந்து தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் பீம்சிங் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிறகு சுகுமாரியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் பீம்சிங். திருமணத்துக்குப் பிறகு, நடிப்பதை விடுவது எனும் முடிவுக்கு சுகுமாரி வந்திருந்தார். ஆனால் பீம்சிங் விடவில்லை. ‘உங்கிட்ட நல்ல திறமை இருக்கு. நடிப்புங்கறது ரொம்ப இயல்பா வருது உனக்கு. உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதால, ஒரு நல்ல நடிகையை தமிழ் சினிமா இழந்துடக்கூடாது. நீ தொடர்ந்து நடி’ என்று உற்சாகப்படுத்தினார் பீம்சிங்.

மம்முட்டி, சுஹாசினியுடன்... சுகுமாரி
மம்முட்டி, சுஹாசினியுடன்... சுகுமாரி

பின்னர், மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார் சுகுமாரி. எம்ஜிஆருடன் நடித்தார். சிவாஜி படங்களில் நடித்தார். ஜெய்சங்கர், முத்துராமன் படங்களிலெல்லாம் நடித்தார். தமிழகத்துக்கும் கேரளத்துக்குமாக மாறிமாறிப் பயணித்து நடித்து வந்தார். ‘சுகுமாரி நடிச்ச படம் வந்துருச்சா? அப்புறமென்ன... இந்த வருஷம் சிறந்த நடிகை, துணை நடிகைன்னு எதாவது அவார்டு அவங்களுக்குத்தான்’ என்று மலையாளத் திரையுலகத்தினர் சொல்லும் அளவுக்குத் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிற படங்கள் கிடைத்தன அவருக்கு!

பாசமும் நேசமுமாக உருகுகிற நல்ல அம்மாவாக நடிப்பார். பணத்திமிர் கொண்ட அலட்சியத்துடன் பந்தா பண்ணுகிறவராக நடிப்பார். மருமகளைக் கொடுமை செய்யும் மாமியாராகவும் வெளுத்துவாங்குவார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலான ஆறு மொழிகளில் வலம் வந்தார் சுகுமாரி. இதில் மலையாளப் படவுலகில், எந்த இயக்குநர் படமெடுத்தாலும் எந்த நடிகர் நடித்தாலும் எந்தத் தயாரிப்பாளர் படமெடுத்தாலும் முதலில் சுகுமாரியைப் புக் செய்துவைத்துவிடுவார்கள். கதை பண்ணும்போதே, ’’சுகுமாரிதான் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் ’’என்று முடிவுசெய்து, அவரின் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள்.

நம்மூரில் காமெடியாகவும், குணச்சித்திரமாகவும் பன்முகங்களுடன் நடித்த மனோரமா, எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தியது போல், அங்கே சுகுமாரியைத்தான் சொல்லுவார்கள்.

பணத்திமிரும் அலட்டலும் கர்வமும் கொண்டு நடிப்பதற்கு அந்தக் காலத்தில் எஸ்.வரலட்சுமியைத்தான் சொல்லுவார்கள். அவருக்குப் பிறகு அப்படியொரு கேரக்டரில் ‘மாப்பிள்ளை’ படத்தில் ஸ்ரீவித்யா, ‘சகலகலா வல்லவன்’ படத்தில் புஷ்பலதா, ‘வான்மதி’ படத்தில் வடிவுக்கரசி என்று பலர் நடித்தார்கள். வரலட்சுமிக்குப் பின்னர் அந்த இடம், சுகுமாரிக்குக் கிடைத்தது. ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில், ஜெயலலிதாவின் அம்மாவாக, சிவாஜியின் மாமியாராக இறுமாப்பும் கர்வமுமாக, அலட்சியமாக, அட்டகாசமாக நடித்திருப்பார். ‘வசந்தமாளிகை’யில் முகத்தை வெடுக்கென்று திருப்பி, எள்ளும்கொள்ளுமாக வெடிக்கிற பார்வையிலேயே அவரின் கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு உணர்த்தினார்.

இதற்கு நடுவே, நாடகங்களிலும் நடிக்கத் தவறவில்லை. சோ தொடர்ந்து நாடகங்களை இயக்கி நடித்தார். அதில் சுகுமாரிக்கு ஏதேனும் ஒரு வேடம் கொடுத்துவிடுவார் சோ. பிறகு டிவி சீரியல் பக்கம் சோ வந்தபோது, சுகுமாரியும் சீரியல்களில் நடித்தார்.

நடிகை லட்சுமி நடித்த ‘சட்டைக்காரி’ மலையாளப் படத்தில், ஆங்கிலோ இந்தியப் பெண்மணியாக நடித்த சுகுமாரியின் நடிப்பு, எல்லோராலும் பாராட்டப்பட்டது. கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் ஆங்கிலம் என சுகுமாரி பேசும் ஸ்டைல் மொத்தக் கேரளத் திரையுலகையும் ரசிகக் கூட்டத்தையும் கட்டிப்போட்டது. ப்ரியதர்ஷன், பாசில் என முன்னணி இயக்குநர்கள் படமென்றால், சுகுமாரியும் வி.கே.ராமசாமியும் நிச்சயம் இருப்பார்கள். சோவின் நாடகங்களிலும் சீரியல்களிலும் சுகுமாரிக்கு அப்படியொரு அட்டகாசமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டதால், தனித்துவத்துடன் திகழ்ந்தார். முக்கியமாக, நகைச்சுவை கலந்த பாத்திரங்களிலும் நடிப்பின் மூலமும் முகபாவனைகள் மூலமும் சிரிக்கவைத்தார்.

மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த ‘ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் முதியோர் இல்லத்தில் இருப்பார் சுகுமாரி. தன் மகனிடம் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, சட்டென்று குரல் தழுதழுக்க... ‘என்னை வீட்டுக்கே கூட்டிக்கிட்டு போயிடுறியா’ என்று குரல் உடைந்து கேட்பார். மொத்த திரையரங்கமும் சுகுமாரிக்காக அழுதது. அந்தக் கதாபாத்திரத்தில் தங்களின் அம்மாவை உணர்ந்து ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர். இதுதான் தமிழில் ‘அரங்கேற்ற வேளை’ என வந்தது.

மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தசரதம்’ படத்தில் மோகன்லால் நாயகன். அவர் வீட்டு வேலைக்காரப் பெண்மணி சுகுமாரி. க்ளைமாக்ஸ் காட்சி உட்பட படம் முழுக்கவே பேசிக்கொண்டிருக்கும்போது, வேலைக்காரப் பணிப்பெண்ணுக்கு உண்டான பாடிலாங்வேஜில் இருப்பார் சுகுமாரி. படத்தின் இறுதிக் காட்சியின்போது ’என்னை உங்க பையனா ஏத்துக்குவீங்களா?’ என்று மோகன்லால் கேட்பார். சட்டென சுகுமாரிக்கு க்ளோஸப் ஷாட் வைக்கப்படும். தடக்கென்று லாங்ஷாட், க்ளோஸப் ஷாட் என்று மாறும்.

அப்போது வேலைக்கார உடல்பாஷையில் இருந்து சட்டென்று விலகி, அம்மாவின் ஸ்தானத்துக்கே உண்டான பார்வை பார்ப்பார் சுகுமாரி. அப்போது உருமாறிய சுகுமாரியின் நடிப்பை மோகன்லால் பல முறை பல மேடைகளில் சொல்லிச் சொல்லி சிலாகித்திருக்கிறார்.

பாலசந்தரின் ‘நூற்றுக்கு நூறு’ படத்தில் ஜெய்சங்கர் ஆசிரியர். ஸ்ரீவித்யா மாணவி. ஆசிரியர் மீது காதல்வயப்படும் ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர் மீது அபாண்டமாக பழிபோட்டுவிடுவார். அதை நம்பி, ஜெய்சங்கரை தண்டிக்க வேண்டும் என்று மகளுக்கு சப்போர்ட் செய்யும் அந்தக் கேரக்டரை கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அட்டகாசமாகப் பண்ணியிருப்பார் சுகுமாரி.

எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, விஜய், தனுஷ் வரைக்கும் நடித்த சுகுமாரி, ஆறு மொழிகளில் இரண்டாயிரத்து ஐநூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். எந்த வேடமாக இருந்தாலும் தன்னைப் பொருத்திக்கொள்கிற அற்புத நடிகை என்பதால்தான், மலையாள சினிமாவின் மனோரமா என்று புகழ்கிறது கேரளத் திரையுலகம். ‘சுகுமாரி அம்மா ஒரு செட்டு முண்டு டிரஸ் (கேரளப் பெண்கள் அணியும் உடை) வைச்சிகிட்டே, எல்லா படத்தோட செட்டுக்கும் போய் நடிச்சிட்டு வந்துருவாரு. அம்மா கேரக்டர்ல வெளுத்து வாங்கிருவாரு’ என்று கேரளத் திரையுலகில் கொண்டாடாதவர்களே இல்லை.

இயக்குநர் பாசிலின் ‘வருஷம் 16’ படத்தில் கார்த்திக், குஷ்பு, பூர்ணம் விஸ்வநாதனுக்குப் பெயர் கிடைத்தது போலவே சுகுமாரிக்கும் கிடைத்தது. அந்தக் குடும்பத்தையும் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவராக இருக்கும் சுகுமாரியையும் மறக்கவே முடியாது. நம் அத்தையைப் போல, சித்தியைப் போல், அம்மாவைப் போல, பாட்டியைப் போல் அப்படி நம் மனதுக்கு நெருக்கமானவராகத்தான் பார்த்தோம் சுகுமாரியை!

1940 அக்டோபர் 6-ம் தேதி பிறந்த சுகுமாரி, 2013 மார்ச் 16-ம் தேதி மறைந்தார். நடிகர்களின் குரலைப் போல் நடிகைகளின் குரல்களை நாம் ஏனோ பெரிதாகக் கவனிப்பதே இல்லை. கண்களை மூடிக்கொண்டு, சுகுமாரி நடிக்கும் காட்சியில், அவர் பேசுகிற வசனங்களைக் கேட்டுப் பாருங்கள்... அந்தக் குரல் ஆணவக் குரலாகவும் மாறும். அன்பையும் உருக உருக, வழியவழியக் கொடுக்கும். தனித்துவமான குரல், வசீகரிக்கக்கூடிய குரல் சுகுமாரியின் குரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in