‘சூரரைப்போற்று’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுதாகொங்கரா அடுத்து ஒரு பயோப்பிக்கை இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘இறுதிச்சுற்று’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் சுதா கொங்கரா. அடுத்து ‘எதிரி’, ‘சூரரைப்போற்று’ ஆகிய படங்களைக் கொடுத்தார். இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோரது நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு ஓடிடியில் நேரடியாக வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றது. படம் ஆஸ்கர் விருதுகள் வரை சென்றது.
இந்த நிலையில், இந்தத் திரைப்படம் தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்குகிறார். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ’சூரரைப்போற்று’ திரைப்படம் கேப்டன் கோபிநாத் அவருடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்தப் படத்தை முடித்ததும் அடுத்து சுதா கொங்கரா மீண்டும் பயோபிக் இயக்குவார் எனவும் இது தொழிலதிபர் ரத்தன் டாட்டா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதில் நடிகர்கள் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இந்தத் தகவல் உண்மை எனில் இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.