ஸ்ரீவித்யா: கண்களால் கதைபேசிய அதிசய நாயகி!

16-வது நினைவுநாளில் சில பகிர்வுகள்
நடிகை ஸ்ரீவித்யா
நடிகை ஸ்ரீவித்யா

நாயகியாக நடித்த படங்கள் குறைவுதான். ஆனாலும் ஒரு சிலரை மட்டுமே என்றென்றும் நாயகி ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்போம். படத்தில் நான்கைந்து காட்சிகளில் மட்டுமே சில சமயங்களில் தோன்றுவார். ஆனாலும் நமக்கு அவர் நாயகிதான். அப்படியான ஒரு அபூர்வ நாயகி ஸ்ரீவித்யா. அந்தச் சிறப்பிடத்தை அவருக்கு நாம் தருவதற்குக் காரணம் அவரது நடிப்பு. அந்த பாந்தமான குரல், குரலில் இருக்கிற கம்பீரம் கலந்த பாசம். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அகன்ற விழிகள் காரணம். தன் வாழ்க்கையின் மொத்த சோகங்களையும் தேக்கி மறைத்துக்கொண்டு, அந்தக் கண்களின் வழியே புன்னகையை மலரவிட்டார். அன்பைப் பொழியச் செய்தார். கருணையையும் வாஞ்சையையும் கொட்டினார். ‘நடிப்பே விருப்பம், நடிப்பதே தொழில்’ என்றிருக்க ஸ்ரீவித்யாவால் முடிந்தது.

இயக்குநர் கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் எம்.ஆர்.பி. என்கிற பைரவி எனும் பாடகியாக, ஜெயசுதாவின் அம்மாவாக கனமான கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்தபோது ஸ்ரீவித்யாவுக்கு 22 வயதுதான். இருவருக்கும் ஐந்து வயதுதான் வித்தியாசம். ரஜினியின் முதல் படம். அவரின் முதல் ஹீரோயின். இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்த்தாலும், ‘ஸ்ரீவித்யாவைத் தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு நடிக்க முடியாதுப்பா’ என்று பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.

’அபூர்வ ராகங்கள்’ படத்தில் இப்படியொரு வயதுக் குறைவு வித்தியாசம் என்றால் கேரள சினிமாவில் வேறு மாதிரி, புதியதொரு சாதனையை நிகழ்த்தினார். ’சட்டம்பிக்காவலா’ எனும் படத்தில், நடிகர் சத்யனுடன் நடித்தார். அப்போது சத்யனுக்கு 57 வயது. அவருடன் நடித்த ஸ்ரீவித்யாவுக்கோ 17 வயது. 40 வயது வித்தியாசத்தையெல்லாம் பார்க்காமல், கேரக்டரையும் வாய்ப்பையும் நடிப்பையும் மட்டுமே பார்த்தார். நடித்தார். ஜொலித்தார்.

ஸ்ரீவித்யா
ஸ்ரீவித்யா

‘காரைக்கால் அம்மையார்’ படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘தகதகதகதகவென ஆடவா’ பாடல் நினைவிருக்கிறதுதானே. அந்தப் பாட்டுக்கு பம்பரமென காற்றையே கிழித்துக்கொண்டு இந்தத் தாளகதிக்கு ஒரு சிறுமி ஆடினாள் நினைவிருக்கிறதா? பார்த்தவர்கள் எல்லோரும் வியந்து புகழ்ந்தார்கள். அவரை நன்கு தெரிந்தவர்கள், ‘எம்.எல்.வி-யின் மகள் பாட்டுக்குயிலாக வருவார் என்று பார்த்தால் ஆட்ட மயிலாகக் களமிறங்கி அசத்துகிறாளே!’ என்று ஆச்சரியப்பட்டார்கள்.

ஆம்! எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அடுத்தும் அவருக்கு இணையாகவும் பேசப்பட்ட இசைமேதை எம்.எல்.வசந்தகுமாரியின் மகள்தான் ஸ்ரீவித்யா.

அம்மாவின் அன்பு கிடைக்க வேண்டிய தருணம். அந்தக் காலகட்டத்தில் அம்மா எம்.எல்.வசந்தகுமாரி இசைக் கச்சேரிகளில் பிஸியாக இருந்தார். கச்சேரிகளுக்காகப் பல ஊர்களுக்குப் பயணித்தார். அப்பாவின் அரவணைப்பும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. விரைவில் அவர் இறந்துவிட்டார். எல்லாம் இருந்தும் ஒருவித தனிமை. அந்தத் தனிமையையே உறவாக்கிக் கொண்டார் ஸ்ரீவித்யா. பாட்டு ஈர்க்கவில்லை. ஆனால் நடனம் இழுத்தது. ஒருவேளை... நாட்டிய சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி வீட்டுக்குப் பக்கத்துவீடு என்பதுதான் காரணமோ என்னவோ!

ஸ்ரீவித்யா
ஸ்ரீவித்யா

அவர்களின் பாராட்டும் ஊக்கமும் முயற்சியும் பயிற்சியும் ஸ்ரீவித்யாவை நடனத்தில் இன்னும் இன்னுமாக மெருகேற்றின. பிறகுதான், ‘திருவருட்செல்வர்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்று படங்கள் கிடைத்தன.

பந்துலு இயக்கிய, ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் எம்ஜிஆருடன் ஜோடி சேரும் வாய்ப்பு வந்தது. ஆனால் வரச்சொல்லிப் பார்த்துவிட்டு, ‘ரொம்பச் சின்னப்பொண்ணா இருக்குதே’ என்று சொல்ல, வாய்ப்பு தடைப்பட்டது. ஆனாலும் அடுத்தடுத்த கட்டத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் சிகரம் பாலசந்தர், ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் ஸ்ரீவித்யாவை மிக அழகான கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார். லொட்டுலொட்டு என்று தட்டுகிற கரண்டியைக் கொண்டே சிவகுமாரிடம் ஸ்ரீவித்யா கேள்வி கேட்பதையும் பதில் சொல்வதையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். ஒரே நாயகனை, மூன்று சகோதரிகளும் காதலிக்க, அதில் தோற்று நொந்துபோகிற பாத்திரத்தை, அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார் ஸ்ரீவித்யா.

இதையடுத்து வரிசையாகப் பல படங்கள். அவரின் நடிப்பையும் அவரின் கண்கள் பேசும் வசனங்களையும் ரொம்பவே ரசித்தது தமிழ் சினிமா. அநேகமாக, டி.ஆர்.ராஜகுமாரியின் கண்களுக்குப் பிறகு, வசனம் பேசும் கண்களாக ஸ்ரீவித்யாவின் கண்கள் திகழ்ந்தன. அந்தக் கண்களைக் கொண்டும் ஆகச்சிறந்த நடிப்பைக் கொண்டும், பைரவி எனும் கதாபாத்திரத்தை அப்படியே தாங்கிப் பிடித்தார்.

ஸ்ரீவித்யா
ஸ்ரீவித்யா

இதில் வேடிக்கை... நிஜத்தில் தன்னைவிட ஐந்து வயது அதிகம் கொண்ட ஜெயசுதாவுக்கு அம்மா. படத்தில், தன்னைவிட வயது குறைந்த கமலின் விருப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கும் மிகப்பெரிய பாடகி. கைவிட்ட காதலன் ரஜினியால் உண்டான குழந்தையை, அனாதைக் குழந்தை என்று வளர்க்கும் கொடுமை... என நடிப்பில் புதியதொரு அவதாரம் காட்டினார் ஸ்ரீவித்யா.

‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலில் ஸ்ரீவித்யாவின் முகபாவங்கள் தனித்துவமிக்கவை. ஒவ்வொரு வரிகளையும் பாவங்களாலேயே சொல்லியிருப்பார். ‘கேள்வியின் நாயகனே, இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா’ பாடலிலும் அப்படித்தான். படத்தின் க்ளைமாக்ஸை பாடலைக் கொண்டே முடித்திருப்பார் கே.பி. அதை ஆரம்பித்து முடித்து வைப்பார் ஸ்ரீவித்யா.

’வெள்ளிவிழா’, ‘நூற்றூக்கு நூறு’, ’உணர்ச்சிகள்’, ‘ஆறு புஷ்பங்கள்’ என நடித்த படங்களிலெல்லாம் தனித்துத் தெரிந்தார். ஆனாலும் இந்த திரைத்துறை அப்படித்தான். ஒருகட்டத்தில், ‘இந்தாங்க அம்மா வேஷம்’ என்றது. ஆனால் கேரளத் திரையுலகம் விதம்விதமான கேரக்டர்களை வாரி வாரிக் கொடுத்தது. 250 படங்களுக்கும் மேல் மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார்.

இங்கே... எந்த கமலுடன் நடித்தாரோ அவருக்கு அம்மாவாகவும் ரஜினியின் முதல் படத்து நாயகி என்ற நிலையில் இருந்து அவருக்கு அம்மா, அக்கா, மாமியார் என்றும் நடிக்கத் தொடங்கியதெல்லாம் தமிழ் சினிமாவில் ஸ்ரீவித்யாவுக்குக் கிடைத்த விநோதப் பரிசுகள். ஆனாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தன் நடிப்பின் மூலம் ஒளிர்ந்தார்; குணச்சித்திர நாயகி என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

‘நூற்றுக்கு நூறு’ படத்தில், ஆசிரியர் ஜெய்சங்கரையே காதலிக்கும் கேரக்டர். குற்ற உணர்ச்சியை ஒரு கண்ணிலும், குறுகுறுப்பை இன்னொரு கண்ணிலுமாகக் காட்டி ஸ்ரீவித்யா செய்த ஜாலம் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியிருக்கும்.

பின்னர், அஜித், விஜய், சூர்யா என எல்லா நடிகர்களுக்கும் அம்மா, அத்தை என வலம் வந்தார். எல்லோருக்கும் பிடித்த நடிகர், பிடித்த நடிகை என்று இருப்பது அரிது. ஸ்ரீவித்யாவை எல்லா இயக்குநர்களுக்கும் பிடிக்கும். பந்தா இல்லாமல், கெடுபிடிகள் செய்யாமல் நடித்துக் கொடுத்துவிட்டுப் போவார். எல்லா நடிகர் நடிகையருக்கும் பிடிக்கும். சீனியர் நடிகை, சிறந்த நடிகை என்கிற ஈகோவெல்லாம் பார்ப்பதில்லை அவர்.

எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கும். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் மிகச்சிறந்த நடிப்பை வழங்குவார். ‘இமயம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தவர்... ‘ஆஹா’ படத்தில் விஜயகுமார் மனைவியாக மடிசார் புடவையுடன் வெளுத்து வாங்கினார். ‘மாப்பிள்ளை’ படத்தில் ரஜினிக்கு மாமியாராக வில்லத்தன அலட்சிய நடிப்பிலும் அசத்தினார்.

வாரப் பத்திரிகையில், தொடர்கதையின் நாயகிக்கு மடிசார் கட்டிக்கொண்ட மாமியாக மாடலிங் செய்தார் ஸ்ரீவித்யா. அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. சொல்லப்போனால் அந்தக் கதை, ஸ்ரீவித்யாவின் புகைப்படத்தாலேயே மிகப்பெரிய பிரபலமாயிற்று.

கே.பாலசந்தரின் ’புன்னகை மன்னன்’ படத்தில் நடனப் பள்ளி ஆசிரியை கதாபாத்திரம். அவரின் சிஷ்யர் வஸந்தின் ‘கேளடி கண்மணி’யின் வாய் பேச முடியாத காது கேட்காத அம்மா. மணிரத்னத்தின் ‘தளபதி’யில் ரஜினிக்கும் அரவிந்த்சாமிக்கும் அம்மா. அங்கே சாப்ளின் செல்லப்பா கமலுடன் அத்தனை வயதுக்குப் பிறகு வேர்விடுகிற காதலில் வெட்கம். இங்கே ‘கேளடி கண்மணி’யில் ராதிகாவிடம் காட்டுகிற இயலாமை கலந்த சோகம். ‘தளபதி’யில், தான் பெற்ற குழந்தையை கூட்ஸ் ரயிலில் விட்டுவிட்டு வந்த குற்ற உணர்ச்சி. ஒரேயொரு முகத்தில், வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களாகக் கூடுவிட்டு கூடு பாய்ந்தார் ஸ்ரீவித்யா.

இயக்குநர் பாசிலின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மொத்தக் கதையும் ஜீவனும் க்ளைமாக்ஸும் ஸ்ரீவித்யாவின் கைகளில் வந்து விழுந்திருக்க, வெகு இயல்பாக, யதார்த்தமாக, அட்டகாசமாக, மிகப் பாந்தமாக நடித்து, அந்தக் காட்சியைத் தூக்கிக்கொண்டு போய் நிறுத்தியிருப்பார். மிகப்பெரிய கரவொலியைத் தட்டிச் சென்றிருப்பார்.

1953 ஜூலை 24-ம் தேதி பிறந்தார் ஸ்ரீவித்யா. 2006 அக்டோபர் மாதம் 19-ம் தேதி புற்றுநோயால் காலமானார். அப்போது அவருக்கு வயது 53. இன்று அவரது 16-வது நினைவுதினம்.

‘ஸ்ரீவித்யா...’ என்று சொல்லும்போதே ஏதொவொரு மென்சோகம் நமக்குள் சட்டென்று எழும். வாழ்க்கையில் சந்தோஷத்தையும் நிம்மதியையும் அனுபவிக்காமலே இறந்துவிட்ட ஸ்ரீவித்யாவுக்கு, கேரள மாநிலம், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.

இன்றைக்கும் அகலக் கண்களுடன் ஆழமாக ஊடுருவிய ஸ்ரீவித்யா ரசிகர்களின் மனதில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். வாழ்ந்துகொண்டேதான் இருப்பார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in