
பிரபல நடிகை வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை போன விவகாரத்தில் நர்ஸ், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் தனுஷுடன் ‘ராஞ்ஜனா’ (Raanjhanaa) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், கணவர் ஆனந்த் ஆகுஜாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். அமிர்தா ஷெர்கில் மார்க்கில் இவர்களின் வீடு உள்ளது.
கடந்த பிப்ரவரி 11-ம் தேதி, இவர்கள் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இதன் மதிப்பு 2.4 கோடி ரூபாய். இது தொடர்பாக உடனடியாக போலீஸில் புகார் செய்யாமல், பிப்ரவரி 23-ம் தேதி புகார் செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சோனம் கபூரின் மாமியாரை கவனித்துக் கொள்ளும் நர்ஸ், அபர்ணா ருத் வில்சன் (31) அவர் கணவர் நரேஷ் குமார் சாகர் (31) ஆகியோர், இந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தை போலீஸார் மீட்கவில்லை என்று கூறப்படுகிறது.