நட்சத்திர தம்பதிகளான சிநேகா-பிரசன்னா தங்களது பத்தாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி என தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் நிறைய பேர். அந்த வரிசையில் சிநேகா-பிரசன்னா ஜோடியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனது. கடந்த 2009-ல் வெளியான ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தபோது காதலில் விழுந்தனர். இருவருக்குமே அதுதான் முதல் படம்.
பின்பு கடந்த 2011-ம் ஆண்டு இதே மே மாதம் 11-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், இரண்டு வயதான ஆத்யந்தா என்ற மகளும் இருக்கின்றனர். இன்று இந்த ஜோடி தங்களது பத்தாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். இது குறித்து நடிகர் பிரசன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘இது எங்களது பத்தாவது வருடம். இத்தனை வருடங்களை நாங்கள் மகிழ்ச்சியாக கடந்துள்ளோம் என்பது அத்தனை எளிது கிடையாது. நீங்கள் பார்ப்பது போல ரோஜாப்பூவை போல நாங்கள் இனிமையாக மட்டுமே கடக்கவில்லை.
எங்களுக்குள்ளும் நிறைய சண்டைகள், ஒத்து கொள்ளாமல் போனது போன்ற பல விஷயங்கள் உண்டு. நான் நிறைய உனக்கு கொடுத்த சத்தியங்களை மீறியுள்ளேன். உன் மனதையும் காயப்படுத்தியுள்ளேன். ஆனால், நீ எப்போதும் என்னுடன் அதே அன்போடு மீண்டும் மீண்டும் இருந்து என்னை வென்றுள்ளாய். உன் அன்பை விடவும் எனக்கு தூய்மையான வலுவான ஒன்று என்னிடம் இல்லை. நீ என் இதயத்தையும் ஆன்மாவையும் நிரப்பி உள்ளாய். லவ் யூ கண்ணம்மா! நமக்கு திருமண நாள் வாழ்த்துகள்!! நாம் இணைந்து வளர்ந்து கொண்டிருப்பதற்கும் வாழ்த்துகள்!’ என சிநேகா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பிரசன்னா.
விஜே ரம்யா உள்ளிட்ட பல பிரபலங்களும் ரசிகர்களும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.