செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ்; பதறிய நடிகர் போண்டாமணியின் மனைவி: நடந்தது என்ன?

செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ்; பதறிய நடிகர் போண்டாமணியின் மனைவி: நடந்தது என்ன?

நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் உறவினர் போல் நடித்து அவரது ஏடிஎம் கார்டில் இருந்து 1 லட்ச ரூபாய் சுடுட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐயப்பந்தாங்கல் விஜிஎன் காலனியில் வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் போண்டாமணி. இவருக்கு இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உறவினர் என கூறி ராஜேஷ் என்ற தீனதயாளன்(34) என்ற வாலிபர் அறிமுகமாகி நடிகர் போண்ட மணியுடன் நெருங்கி பழகி அவருக்கு உதவியாக இருந்துவந்துள்ளார். பின்னர் போண்டாமணி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னரும் ராஜேஷ் அவர் வீட்டிற்கு சென்று உதவி செய்துவந்துள்ளார்.

கைதான ராஜேஷ்
கைதான ராஜேஷ்

இதனை நம்பி போண்டாமணியின் மனைவி மாலதி, ராஜேஷிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து கணவருக்கு மருந்து வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார். மருந்து வாங்க சென்ற ராஜேஷ் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த மாலதி, அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் மாலதி செல்போன் எண்ணுக்கு 1 லட்ச ரூபாய் நகை வாங்கியதாக வங்கியில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாலதி இது குறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருப்பூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற தீனதயாளன் (34) என்பவர் போண்டாமணியின் உறவினர் போல் நடித்து நெருங்கி பழகி மருந்து வாங்க கொடுத்த ஏடிஎம் கார்டில் இருந்து 1 லட்ச ரூபாய் நகை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து ராஜேஷை தேடிவந்த நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராஜேஷை இன்று காலை போலீஸார் கைது செய்தனர். கைதான ராஜேஷ் மீது ஏற்கெனவே கோவை, திருப்பூர் காவல் நிலையங்களில் இதேபோல் மோசடியில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in