’பத்து தல’படப்பிடிப்பில் மார்ச் மாதம் முதல், நடிகர் சிம்பு பங்கேற்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, சாயா சிங் உட்பட பலர் நடித்து ஹிட்டான கன்னட படம், முப்ஃதி. நார்தன் இயக்கி இருந்த இந்தப் படம் தமிழில், ’பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சிவராஜ்குமார் நடித்த கேரக்டரில் தாதாவாக சிம்புவும், ஸ்ரீமுரளி நடித்த போலீஸ் கேரக்டரில் கவுதம் கார்த்திக்கும் நடிக்கின்றனர்.
பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்யபுத்திரன், டீஜே அருணாச்சலம் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சூர்யா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’, ஆரி நடித்த ’நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா, இதை இயக்குகிறார்.
இதில் போலீஸாக நடிக்கும் கவுதம் கார்த்திக்கின் காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டு விட்டன. சிம்பு நடிக்கும் காட்சிகளும் கவுதமும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட வேண்டி இருக்கின்றன. இதன் படப்பிடிப்பில், மார்ச் 1-ம் தேதி சிம்பு கலந்துகொள்கிறார். ஒரு மாதம் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கிறது.
ஏற்கெனவே, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பை முடித்துவிட்ட சிம்பு, ‘பத்து தல’ படத்துக்குப் பிறகு, கோகுல் இயக்கும் ’கொரோனா குமார்’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.