தமிழில் ‘மழை’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஸ்ரேயா சரண், ’திருவிளையாடல் ஆரம்பம்’, ‘சிவாஜி’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் செலக்டீவான படங்களில் நடித்து வருகிறா் ஸ்ரேயா. தற்போது பான் இந்தியா படமாக உருவாகி இருக்கக்கூடிய ‘கப்ஜா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் புரமோஷனுக்காக சென்னை பறந்து வந்தவரிடம் ‘காமதேனு’வுக்காகப் பேசினோம். சினிமா, குடும்ப வாழ்க்கை என பல விஷயங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
‘கப்ஜா’ படத்தின் ட்ரைலர் காட்சிகளைப் பார்த்துவிட்டு, ‘கே.ஜி.எஃப்.’ படம் போலவே இருப்பதாகச் சொல்கிறார்களே..?
படம் வெளியாக இன்னும் சில வாரங்கள்தான் இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தயாரிப்பாளர் சொன்னது போல, இந்தப் படம் உருவாக்கத்தில் ‘கே.ஜி.எஃப்’ படத்தை விடவே பிரம்மாண்டமாக இருக்கும். இந்தப் படத்தில் உபேந்திரா, சுதீப் என இரண்டு பெரிய கதாநாயகர்கள் இருக்கும்போது என்னுடைய கதாபாத்திரம் இதில் என்னவாக இருக்கப் போகிறது என்றுதான் முதலில் நான் யோசித்தேன். இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் நான் எப்படி இருக்க வேண்டும், எப்படி தோற்றமளிக்க வேண்டும் என இயக்குநரும் தயாரிப்பாளரும் தெளிவாக இருந்தார்கள். இந்தப் படமும் எனக்கு அற்புதமான ஒரு அனுபவத்தைக் கொடுத்தது.
‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘கப்ஜா’ எனத் தொடர்ச்சியாக பான் இந்தியா படங்களிலேயே நடித்து வருவதன் காரணம் என்ன?
தொடர்ச்சியாக பான் இந்திய படங்கள் வாய்ப்பு எனக்கு வருகிறது என்பது நல்ல விஷயம்தானே! அதன் மூலம் இன்னும் அதிக அளவிலான பார்வையாளர்களை சென்று சேர முடியும். ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும் அது எனக்கு நல்ல பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது. அதேபோல, ‘கப்ஜா’ படத்திலும், தைரியமான ஒரு கதாபாத்திரம் எனக்கு.
ஒரு நடிகையாக, நாம் நடித்த படங்கள் வெற்றிப் பெற வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு உண்டு. அப்போதுதான் வேலை செய்த திருப்தி என்பது இருக்கும். அந்த வகையில், நான் நடித்த பான் இந்தியா படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கு வரவேற்பு கொடுத்தது போலவே, ‘கப்ஜா’ படத்திற்கும் வரவேற்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.
சமீப காலமாக நேரடித் தமிழ்ப் படங்களில் நடிப்பது இல்லையே ஏன்?
நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்தான். வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன். தமிழ் சினிமா எனக்கு நிறைய நல்ல படங்களைக் கொடுத்துள்ளது. ஷங்கர் சார் போன்ற பெரிய இயக்குநர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். திருமணமாகி குழந்தைப் பெற்றது, பிறகு கோவிட் என ஒரு சின்ன பிரேக் இருந்தது உண்மைதான். குறிப்பாக, கோவிட் காலத்தில், மீண்டும் வேலை செய்வோமோ என்ற நிலைதான் பலருக்கும் இருந்தது. அதனால், இனி வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
அதனால், நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் நடிக்கும் படங்களை நாளை என் மகள் ராதா வளர்ந்து பெரியவளாகும்போது பார்த்து பெருமைப்பட வேண்டும்.
கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள் அதிகம் வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்! இன்னும் அதிகம் வரவேண்டும் என்றுதான் சொல்வேன். கதாநாயகி, கதாநாயகர்களது படங்கள் என்பதைத் தாண்டி, நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என்பதே இங்கு முக்கியம் என நினைக்கிறேன். அதுபோன்ற கதைகளை நோக்கியே இப்போது இந்திய சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறது.