போதைப் பொருள் வழக்கு: பிரபல நடிகையின் சகோதரருக்கு சம்மன்

நடிகை ஷ்ரத்தா கபூருடன்  சித்தாந்த் கபூர்
நடிகை ஷ்ரத்தா கபூருடன் சித்தாந்த் கபூர்

போதைப் பொருள் வழக்கில் பிரபல நாயகியின் சகோதரருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த ஜூன் 12-ம் தேதி இரவு பிரம்மாண்ட பார்ட்டி நடந்தது. அதில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு சுமார் 35 பேர் இருந்தனர். அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீஸார், ரத்த பரிசோதனை செய்தனர். அதில் 5 பேர் கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து அவர்களிடம் விசாரித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், இந்தி நடிகர் சித்தாந்த் கபூர். இவர் பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன். நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் .

தொடர்ந்து அவர்களை விசாரித்த போலீஸார், காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் ஓட்டல் ஊழியர்கள் உட்பட 23 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் போலீஸார் சிந்தாந்த் கபூருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஓட்டலில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போதைப் பொருள் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், வரும் ஒரு வாரத்துக்குள் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சித்தாந்த் கபூரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in