`சிவாஜி எழுதிய உயில் ஜோடிக்கப்படவில்லை'- சகோதரிகளின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் பிரபு!

`சிவாஜி எழுதிய உயில் ஜோடிக்கப்படவில்லை'- சகோதரிகளின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் பிரபு!

நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்களான சாந்தி, ராஜ்வி ஆகியோர் தனது சகோதரர்களான நடிகர்கள் பிரபு, ராம்குமார் மீது சொத்து தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், `கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துகளை முறையாக நிர்வகிக்கவில்லை. வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றிவிட்டனர்.

இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துகளில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துகளை விற்றுள்ளனர். அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர். சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in