இயக்குநருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரபல நடிகர் ஷாருக்கான் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் விலகியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இப்போது அட்லீ இயக்கும் ’ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, சான்யா மல்ஹோத்ரா உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு இடையே, சித்தார்த் ஆனந்தின் ’பதான்’, ராஜ்குமார் ஹிரானியின் ’டுங்கி’ படங்களிலும் ஷாருக்கான் நடித்து வருகிறார்.
’டுங்கி’ படத்தில் ஷாருக்கான் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்', '3 இடியட்ஸ்', 'பிகே', 'சஞ்சு' படங்களை இயக்கியவர். இந்தப் படத்துக்கு அமித் ராய் ஒளிப்பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அந்தப் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் அமித் ராய் விலகியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’’ராஜ்குமார் ஹிரானியும், நானும் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறார். இப்போது அவர் பார்வையும், என் பார்வையும் வேறாக இருக்கிறது. 18,19 நாட்கள் அந்தப் படத்தில் பணியாற்றினேன். இருவருக்கும் படைப்பு ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டதால் விலக முடிவு செய்தேன். இருவரும் பேசியதால், இணக்கமாக வெளியேறிவிட்டேன். நான் இதுவரை எடுத்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறும். அதில் மாற்றம் இருக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.