தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார் என்றும் தற்போது தனக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டுவதாகவும் கானா பாடல் இசையமைப்பாளர் மீது இளம்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "தனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். தான் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வருகிறேன். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு தேவாலயத்திற்கு செல்லும் போது கானா பாடல் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் தனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சபேஷ் தன்னுடன் பாலியல் உறவில் இருந்து வந்தார்.
சில மாதங்களுக்குப் பின் சபேஷ் தன் மீது சந்தேகப்பட்டு ஒவ்வொரு நாளும் தனக்கு பல விதமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். நாளுக்கு நாள் சபேஷ் சாலமன் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்ததால், அவரை பிரிந்து தனியாக வாழத் தொடங்கினேன். ஆனால் சபேஷ் அவருடன் ஒன்றாக இருந்தபோது எடுத்த நெருக்கமான புகைப்படம் மற்றும் தனக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்துக்கொண்டு அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க தன்னுடன் உறவில் இருக்க வேண்டும் என மிரட்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்.
இது குறித்து சபேஷ் சாலமனின் தந்தை செல்வகுமாரிடம் தெரிவித்த போதும் அவர் மகனுக்கு உடந்தையாக செயல்பட்டதுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதுமட்டுமன்றி சபேஷ் சாலமன் நடத்தும் ஒரு யூடியூப் சேனலில் தன்னுடைய ஆபாச போட்டோ, வீடியோக்களை வெளியிட்டார். தொடர்ந்து தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் இசையமைப்பாளர் சாலமன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண், சபேஷ் சாலமன் இசையமைப்பாளர் என்பதைக் காட்டும் விதமாக கானா பாடல் பாடியபடியே தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஆடியோ ஆதாரங்களுடன் தெரிவித்தார்.