நடிகை கொடுத்த பாலியல் புகார்: இன்று முதல் பிரபல நடிகரிடம் விசாரணையை தொடங்குகிறது போலீஸ்

நடிகை கொடுத்த பாலியல் புகார்: இன்று முதல் பிரபல நடிகரிடம் விசாரணையை தொடங்குகிறது போலீஸ்

நடிகை கொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல நடிகரின் இன்று முதல் விசாரணை நடக்கிறது.

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கொச்சி போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஃபேஸ்புக் லைவில் தோன்றிய விஜய் பாபு, நடிகையின் பெயரை அதில் வெளியிட்டார். இது பரபரப்பானது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் விஜய் பாபு, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார். போலீஸார் அவர் பாஸ்போர்ட்டை முடக்கினர். பின்னர் அவர் கொச்சி திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலியல் வன்கொடுமை ஏதும் செய்யவில்லை. நடிகையின் சம்மதத்துடனேயே அது நடந்தது. அடுத்த படத்தில் வாய்ப்பு வழங்காததால் அவர் இவ்வாறு புகார் கூறியுள்ளார். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்" என்றார். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவருடைய செல்போன்களைக் கைப்பற்றிய போலீஸார் தடயவியல் சோதனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில். அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி முன்ஜாமீன் வழங்கியது. அப்போது சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்யக் கூடாது, மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது, சமூக வலைதளங்களில் நடிகை மற்றும் அவர் குடும்பத்தைப் பற்றி அவமதிக்கக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளுடன் இந்த ஜாமீன் வழங்கப்பட்டது.

இன்று முதல் ஜூலை 3-ம் தேதி வரை இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவரிடம் இன்று முதல் விசாரணை தொடங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in