ஜாலியா ஆரம்பிச்சு இவ்ளோ தூரம் வந்தாச்சு!

- ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ வைஷ்ணவி அருள்மொழி
வைஷ்ணவி அருள்மொழி
வைஷ்ணவி அருள்மொழி

யூடியூப் சேனலில் முகம்காட்டி அதன் வழியே சின்னத்திரையில் நுழைந்தவர் வைஷ்ணவி அருள்மொழி. மலர், அழகு சீரியல்களைத் தொடர்ந்து 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், சபாபதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...

சின்ன வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டோ?

நான் மீடியாவுக்குள் வந்ததே எதிர்பாராமல் நடந்த விஷயம் தான். ஏரோநாட்டிக்கல் முடிச்சுட்டு யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் மைண்ட்செட்ல இருந்தப்போ, 'சிலாக்கி டும்மா' யூடியூப் சேனல்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ரக் ஷாபந்தன் பத்தி ஒரு வீடியோ பண்ண அவங்களுக்கு வேற ஆர்டிஸ்ட் கிடைக்கலனு எங்கிட்ட கேட்டாங்க. சரி ஜாலியா பண்ணலாம்னு நினைச்சி ஓகே சொன்னேன். அப்படி தொடங்கி இவ்ளோ தூரம் வந்திருக்கேன்.

முதல் சீரியல் வாய்ப்பு எப்படி கிடைச்சது?

அந்த யூடியூப் வீடியோல என்னோட கீதா சரஸ்வதி மேம் நடிச்சிருந்தாங்க. அவங்க தான் சொன்னாங்க, கலர்ஸ் தமிழ்ல வர்ற மலர் சீரியலுக்கு செகண்ட் லீட் ரோலுக்கு ஆடிசன் நடக்குது கலந்துக்கோனு. சரினுட்டு கலந்துக்கிட்டேன். அப்படியே செலக்ட் ஆகிட்டேன். அந்த ரோல் பிடிச்சிருந்ததால அனுபவிச்சு நடிக்க ஆரம்பிச்சேன். அடுத்து சன் டிவியின் 'அழகு' சீரியலில் வாய்ப்பு கிடைச்சது. அதுக்குப் பிறகு, இப்ப விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்கு இருவர் ' சீரியலில் மூணாவது லீட் ரோல் பண்ணிட்டு இருக்கேன்.

சினிமா பக்கமும் கவனம் செலுத்தத் தொடங்கிட்டீங்க போல?

குக்கர் விளம்பரம் ஒண்ணுல நடிச்சிருந்தேன். அதுக்கு காஸ்டிங் பண்ண டீம் தான் 'சபாபதி' படத்துக்கும் காஸ்டிங் பண்ணிருந்தாங்க. அவங்க தான் சொன்னாங்க, அந்தப் படத்துல சந்தானம் சார் தங்கச்சி ரோலுக்கு ஆர்டிஸ்ட் தேடிட்டு இருக்காங்க; உடனே ஷூட் போறாங்க. நீங்க ட்ரை பண்ணுங்கனு. சரின்னுட்டு ட்ரை பண்ணேன். ஓகே ஆகி நடிச்சேன். அதுல நடிச்சிட்டு இருக்கும்போதே, ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவா சார் டைரக் ஷன்ல சசிகுமார் சார் ஹீரோவா நடிக்கிற படத்துலயும் வாய்ப்பு கிடைச்சிது; அதிலும் நடிச்சிருக்கேன்.

குறுகிய காலத்திலேயே 3 தளங்களிலும் நடிச்சிருக்கீங்க... அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்?

யூடியூப் சேனல்ல பொறுத்தவரைக்கும் அது ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஜாலியா நடிச்சிட்டு போயிடுற சூழல் தான் இருக்கும். ஆனா, சீரியல்ல அப்படி இல்ல. நம்மோட எக்ஸ்பிரஷன்ஸ ரொம்ப தெளிவா வெளிப்படுத்தணும். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தது. அதனால ஒரு சில வாரம் எனக்கு ஷூட் இல்லாத டைம்ல, ஸ்பாட்ல இருந்து மற்ற ஆர்டிஸ்ட் நடிக்கிறத நல்லா கவனிச்சேன். அதுக்கு அப்புறம் சீரியல் பேட்டனுக்கு பழகிக்கிட்டேன்.

சினிமாவைப் பொறுத்தவரை, ஜாலியா நேச்சுரலா நடிச்சிட்டுப் போயிடுற மாதிரியான சூழல் தான் இருந்துச்சு. சீரியல் மாதிரி ஒரே நாள்ல 5 முதல் 7 சீன்ஸ் அல்லது டபுள் யூனிட் செட்போட்டு 12 சீன்ஸ் வரை நடிக்கிற சூழல் எல்லாம் சினிமாவில் இல்ல. அதனால சினிமா ஷூட் ரொம்பவே பிடிச்சிருந்தது.

மீண்டும் போட்டித் தேர்வுகள் பக்கம் கவனம் செலுத்துறீங்களா? புதிய வாய்ப்புகள் எந்த அளவுக்கு வருது?

இப்போதைக்கு எக்ஸாம்ஸ்ல கவனம் செலுத்தல. அடுத்தடுத்து நடிச்சிட்டு இருக்கிறதால பண்ற விஷயத்தை நல்லா பண்ணணும்னு நினைக்கிறேன். எதிர்காலத்துல எப்படினு பார்க்கலாம். விரைவில் ஸீ தமிழில் வரவிருக்கும் 'பேரன்பு'ங்கிற சீரியல்ல ஹீரோயினா நடிக்கிறேன். அதுதான் இப்போதைக்கு எனக்குக் கிடைச்சிருக்கிற அடுத்த வாய்ப்பு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in