
தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணியை காப்பாற்ற வேண்டும் என நடிகர் பெஞ்சமின் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த ‘பவுனு பவுனுதான்’ திரைப்படம் மூலமாக 1991ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் போண்டாமணி. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் வடிவேலுவுடன் நடித்தப் படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. ‘வின்னர்’, ’இங்கிலீஸ்காரன்’, ‘அழகர் மலை’, ‘மருதமலை’, ‘சுந்தரா டிராவல்ஸ்’ போன்ற படங்களில் வடிவேலுவுடன் இவரின் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டது. அதுபோல ‘படிக்காதவன்’, ‘வேலாயுதம், ‘ஜில்லா’ போன்ற படங்களிலும் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவர் இதுவரை சுமார் 200 படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு அண்மையில் இதயக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து, மீண்டும் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது போண்டாமணிக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “அண்ணன் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். உயிருக்குப் போராடும் அவருக்கு இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது உயர் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்து இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும். உங்களால் முடிந்தால் அரசியல் தலைவர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்லி அண்ணன் போண்டா மணியை காப்பாற்ற வேண்டும். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்'என அந்த வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. போண்டாமணி அதிமுக உறுப்பினராகவும் உள்ளார். தேர்தல் சமயங்களில் அதிமுகவுக்கு ஆதரவாகவும் பரப்புரை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.