
சந்தானம் கதாநாயகனாக அறிமுகமான பிறகு அவருக்கு மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது 'தில்லுக்கு துட்டு'. ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்த இந்த படத்தை 'லொள்ளு சபா' காமெடி ஷோ இயக்குனர் ராம்பாலா இயக்கியிருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டனி, இணைந்து 2019-ம் ஆண்டு 'தில்லுக்கு துட்டு 2' என்ற படத்தை கொடுத்தது. இந்தப்படமும் வெற்றியாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து சந்தானம் நடித்த படங்கள் சுமாரான ரகமாக இருந்த நிலையில், தனக்கு வெற்றியைத் தேடித்தந்த தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார். 'டிடி ரிட்டர்ன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் சில மாதங்கள் முன் தொடங்கப்பட்டு, தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
ராம்பாலாவின் உதவி இயக்குநர் பிரேம் ஆனந்த் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சந்தானம், சுரபி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியும், டிரைலரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 28-ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் டிரைலரும் இன்று வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.