தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து குறித்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாகி வருகிறது.
நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இருவரும் கடந்த வருடம் பிரிவதாக திடீரென அறிவித்தனர். விவகாரத்துக்கான காரணம் பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. ஆனால், அதை சமந்தா மறுத்தார். இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் சுயசரிதையான ’வில்’ என்ற புத்தகத்தில் இருந்து சில மேற்கோள்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை சமந்தா. இது சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதில், ’‘கடந்த 30 வருடமாக, அனைவரையும் போலவே, நானும் தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து மற்றும் மரணத்தை சந்தித்தேன். என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. என் பணம் பறிக்கப்பட்டது. என் தனிமை ஆக்கிரமிக்கப்பட்டது. என் குடும்பம் சிதைந்துவிட்டது. இருந்தாலும் ஒவ்வொரு நாளும் எழுந்து, கான்கிரீட் கலந்து, என் வாழ்க்கையின் அடுத்த செங்கலை தூக்கி வைத்தேன். நீங்கள் எதைச் சந்தித்தாலும் பரவாயில்லை. உங்கள் முன் எப்போதும் இன்னொரு செங்கல் காத்திருக்கிறது. உங்கள் முன் இருக்கிற ஒரே கேள்வி, நீங்கள் எழுந்து நடக்கப் போகிறீர்களா அல்லது அப்படியே அமுங்கி கிடக்கப் போகிறீர்களா? என்பதுதான்’’ என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், வில் ஸ்மித் புத்தகத்தின் ஸ்னீக் பீக்கை பகிர்ந்து, என்ன ஒரு அருமையான புத்தகம் என்று கூறியுள்ள சமந்தா, ‘’கடுமையாக உழையுங்கள், தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், சுயமாக சிந்தியுங்கள், புதுப்பித்துக் கொள்ளுங்கள், ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். இது நகைச்சுவை உணர்வுடன் கூடிய கவர்ச்சிக்கரமான புத்தகம்’’ என்று தெரிவித்துள்ளார்.