பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். பாலிவுட் நட்சத்திரங்களுடனான அவரது கலந்துரையாடாலில் பல சுவாரசியத் தகவல்கள் கிடைக்கும் என்பதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இப்போது இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீஸன் தொடங்கியிருக்கிறது.
ஜூலை மாதம் டிஸ்னி +ஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி நேரடியாக வெளியாகிறது. இதற்கான புரொமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர்கள் அனில் கபூர், ஜான்வி கபூர், அக்ஷய் குமார், ரண்வீர் சிங், ஆலியா பட், விஜய் தேவரகொண்டா, சமந்தா என ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். புரொமோவில் கரண் ஜோஹர் சமந்தாவிடம் மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்க்கை, விவாகரத்து ஆகியவை பற்றி கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு சமந்தா, ‘நம் மகிழ்ச்சியான வாழ்வுக்கு எப்படி நாம்தான் காரணமோ அது போலவே, நம்முடைய மகிழ்ச்சியில்லாத வாழ்வுக்கும் நாம்தான் காரணம். நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் வெவ்வேறு விதமான எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அது பூர்த்தி அடையாதபோது ஏமாற்றம் வருகிறது. அப்போது வாழ்க்கை கடினமான ஒன்றாக மாறுகிறது. காதலும் அதன் பின்னான திருமண வாழ்க்கையும் ‘கபி குஷி கபி கம்’ படம் போல இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது வாழ்க்கை ‘கேஜிஎஃப்’ படம் போல கடினமான ஒன்றாக மாறுகிறது’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார் சமந்தா.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமந்தா, நாக சைதன்யா இருவரும் கணவன் - மனைவி என்ற உறவிலிருந்து பிரிவதாக அறிவித்தார்கள். அதன் பிறகு நாக சைதன்யா இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற செய்தி வந்தபோது சமந்தா தரப்புதான் அதைத் திட்டமிட்டு பரப்பியதாகவும் சிலர் வதந்தி பரப்பினர். இதையடுத்து, ‘சம்பந்தப்பட்ட நாங்கள் இருவருமே அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதை விட்டுவிட்டு உங்கள் வேலையைப் போய்ப் பாருங்கள்’ என சமந்தா பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.