நடிகை சமந்தாவின் 35-வது பிறந்தநாள் நேற்று. இதற்காக ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனை ஒட்டி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSam என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் ரசிகர்களின் சுவாரசியமான கேள்விகளையும் அதற்கு சமந்தா அளித்த பதில்களையும் இங்கு தொகுப்பாகப் பார்க்கலாம்.
ஒரே சமயத்தில் சமமாக அன்பையும் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
அது அன்பாக இருந்தாலும் சரி, வெறுப்பாக இருந்தாலும் சரி எதற்குள்ளும் நான் உள்ளே போக விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விலகி இருக்கவே முயற்சி செய்கிறேன்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் உங்களுடைய கதிஜா கதாபாத்திரம் குறித்து சொல்லுங்கள்? அதில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
மக்களை மகிழ்விக்கும் வகையிலான அந்தப் படத்தின் கதையில் நானும் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். பெரிதாக யோசிக்காமல், எதைப் பற்றியும் ஆராயாமல் உங்களது வழக்கமான ஒரு நாளின் பிரச்சினைகளில் இருந்து பிரேக் எடுத்து சிரித்து சந்தோஷமாக இருங்கள். அதுதான் அந்தப் பாத்திரம்!
‘கதிஜா’வுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்க்காமல் காஷ்மீருக்குப் போய்விட்டீர்களே...
கதிஜா கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் வரவேற்பிற்கு எப்போதும் என்னுடைய நன்றி. இதைத்தான் என்னுடைய சிறந்த பிறந்தநாள் பரிசாகப் பார்க்கிறேன்.
அனிருத் இசை பற்றி சொல்லுங்கள்?
அவர் எப்பொழுதுமே ஸ்பெஷல்! ஜீனியஸ்! ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் அவர் இசையில் ‘டிப்பம் டப்பம்’ பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
நயன்தாரா குறித்து சில வார்த்தைகள்?
நயன்தாரா எப்பொழுதும் நயன்தாராதான். அவரைப் போல வேறு யாருமே கிடையாது. அவர் உண்மையானவர், நேர்மையானவர். கடுமையாக உழைக்கக்கூடியவர். அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.