சினிமாவில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ளதை அடுத்து, நடிகை சமந்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சமந்தா, இதன் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யாவுடன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படம், கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி வெளியானது.
இந்தப் படம் வெளியாகி 12 வருடம் ஆனதை அடுத்து, நடிகை சமந்தா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’‘திரையுலகில் எனது 12-வது வருடத்தை நிறைவு செய்கிறேன். லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் மற்றும் அருமையான தருணங்களைச் சுற்றி இந்த 12 வருட நினைவுகள் இருக்கின்றன. ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பயணம் மற்றும் உலகின் சிறந்த, விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதற்காக நன்றியுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திரைத் துறையினர் மற்றும் ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.