’சாகாவரக் கலைஞன்’ கே.விஸ்வநாத் இசைத்த ‘சலங்கை ஒலி!’

கமல் - ஜெயப்ரதா
கமல் - ஜெயப்ரதாசலங்கை ஒலியில்...

கலையில் தோற்றவர்களைக் கண்டுகொள்ளாமலேயே புறந்தள்ளியிருக்கிறது, காலமும் சமூகமும்! தோற்றுவிட்ட கலைஞனின் வாழ்வை, வலிக்க வலிக்கச் சொல்லிப் பதிவு செய்தார் இயக்குநர் கே.விஸ்வநாத். நம்மைப் பதறடித்த, கலங்கடித்த ’சலங்கை ஒலி’, இன்னமும் நம் செவிப்பறைகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

பரதம் மீது ஆர்வமும் வெறியும் கொண்டு கற்றுக்கொள்ளும் ஏழை சமையற்கார அம்மாவின் மகன் பாலு. கடைசிவரை, அவனின் திறமைக்கு மேடை கிடைக்காமலே போகிறது. அன்பான அம்மாவும் இறக்கிறாள். ஆதரவும் கரிசனமும் காட்டியவளை அவளின் கணவருடனே சேர்த்துவைக்கிறான். எல்லாப் பக்கமும் தோல்வி. குடிக்கத் தொடங்குகிறான். பரதநாட்டியங்களின் சகல கலைகளிலும் தேர்ந்த பாலு, அதனை விமர்சனம் செய்யும் பத்திரிகைப் பணியில் இருக்கிறான். அதுவும் எல்லாமாகவும் இருக்கிற நண்பனின் உதவியுடன்!

ஃப்ளாஷ்பேக்காக விரிகின்றன பழைய நினைவுகள். கலை வளரவளர, அந்தக் கலையின் மூலமாகவே காதலும் வளருகிறது பாலுவுக்கு. அவனை மட்டுமின்றி அவன் கலையையும் சேர்த்து விரும்புகிற அந்தப் பெண்... அவனின் எதிர்கால வளர்ச்சிக்காக, அவனின் திறமைக்கான மகுடத்திற்காக அல்லாடுகிறாள். ஒருகட்டத்தில், கலையும் கைகொடுக்கவில்லை. அவளுடனான காதலும் கைசேரவில்லை. மறக்கவேண்டும் என்பதற்காக, மறக்காமல் குடிக்கிறான்.

காலங்கள் நர்த்தனமாடுகின்றன. அதுவொரு பரத நிகழ்ச்சி. அங்கே தப்பாக அபிநயம் பிடிக்கும் பெண்ணைப் பற்றி பாலு எழுத, அந்தப் பெண்ணும் அவளின் காதலனும் பத்திரிகை ஆபீஸுக்கு வந்து கொந்தளிக்கிறார்கள். அப்போதுதான் அவனின் நடனத்திறமை ஆடியன்ஸான நமக்குத் தெரிகிறது. அந்தப் பெண் யாருமல்ல... பாலு காதலித்தவளின் மகள்.

இந்த விவரமெல்லாம் தெரிந்ததும் அந்த ஊருக்கு வருகிறாள் காதலி. முன்னாள் காதலனின் நண்பனைப் பார்க்கிறாள். குடித்துக்குடித்து அவன் அழிந்துகொண்டே வருவதை நண்பன் விவரிக்கிறான். பதறிப் போகிறாள். நண்பனின் மனைவிக்குச் சிகிச்சை, அந்த ஆடத்தெரியாத பெண்ணுக்கு நடனப்பயிற்சி என்றெல்லாம் சொல்லி, பாலுவை ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அங்குதான், தன் முன்னாள் காதலியைப் பார்க்கிறான் பாலு. அப்படி அவன் பார்க்கிற வேளையில், விதவையாக இருந்தபோதிலும் அவனுக்காக, அவனின் இருதயக்கூடு வெடித்துவிடாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக, நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொண்டு அவனெதிரே வருகிறாள். விவரம் அறிகிறான். அவள் மீது வைத்திருந்த காதலையும் மதிப்பையும் அவளின் பெண்ணின் மீது அன்பாகவும் கனிவாகவும் கரிசனமாகவும் நேசமாகவும் கொட்டித்தீர்க்கிறான். தன்னிடம் உள்ள மொத்த வித்தையையும் அவளுக்குச் சொல்லிக்கொடுக்க நினைக்கும் வேளையில், தன்னுடைய முன்னாள் காதலியானவள், விதவைு என்று தெரிந்து உடைகிறான். இதயம் பலஹீனமாகிறது.

மோசமான நிலையில் சிகிச்சை. மருத்துவமனையில் அட்மிட்டாகியிருக்கிறான். அதேசமயம், படுத்தபடுக்கையாக இருந்துகொண்டே, அவளுக்கு நடனப்பயிற்சி அளிக்கிறான். அவளின் அரங்கேற்றம் நிகழ்கிறது. அங்கே... அந்தப் பெண் ஆடுகிறாள். பாலு எனும் கலைஞனும் அவனையும் அவனின் கலையையும் முழுமையாக நேசித்து பூஜித்த அந்தப் பெண்ணின் அம்மாவும் அங்கே நடனமாடுகிற மகளை, பாலுவின் வார்ப்பாகவே பார்க்கிறார்கள். பாலுவே அங்கு ஆடுகிறான் என்று தோன்றுகிறது அவர்களுக்கு!

அப்போது, நடன குருவை, பாலுவை அறிமுகம் செய்துவைத்து, பாலு எனும் கலையின் தெய்வத்தை அம்மா விவரிக்கிறார். மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்து கரவொலி எழுப்புகிறது. அது தோற்றுப்போன பரதக் கலைஞனுக்கு புதியதொரு அனுபவம். இது கிடைக்கத்தான் பால்யத்தில் இருந்து ஆசை கொண்டான் பாலு. ஆகவே, இன்னும் கைத்தட்டச் சொல்கிறான். கைத்தட்டுகிறார்கள். காதாரக் கேட்கிறான். இவையெல்லாம் மரணத் தருணத்தில் கிடைக்க, நிம்மதியாகக் கண்மூடி இறக்கிறான். படமும் முடிகிறது.

இப்போது சலங்கை ஒலி பார்த்தாலும், பாலு எனும் கலைஞனின் வடிவத்தில் ஆயிரமாயிரமாக இருக்கும் தோற்றுப் போன கலைஞர்கள், வாய்ப்புக் கிடைக்காத கலைஞர்கள் நம் எதிரே வந்து நிற்பார்கள்.

’சங்கராபரணம் தந்த கே.விஸ்வநாத்தின் இன்னுமொரு பிரம்மாண்டப் படைப்பு ‘சலங்கை ஒலி’. ’சங்கராபரணம்’ படத்தில் சாஸ்திரீய சங்கீதத்தின் மேன்மையைச் சொன்னார். ‘சலங்கை ஒலி’யில் பரதக்கலையை பறைசாற்றினார். ‘சங்கராபரணம்’ படத்துக்கு திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் துணையாக இருந்தார். ‘சலங்கை ஒலி’யில் இசைஞானி இளையராஜா, சங்கநாதம் எழுப்பினார்.

கமல் எனும் கலைஞனின் மகுடத்தில், இன்னுமொரு மயிற்பீலிதான் இந்த ‘சலங்கை ஒலி’.. இளையராஜா எனும் இசையரசனின் ராஜாபாட்டைகளில் தனியிடம் பிடித்த படம். கவிப்பேரரசு வைரமுத்து எனும் ரசனைக் கவிஞனின் ஒவ்வொரு வரிகளிலும் பரதமும் காதலும் நட்பும் தோல்வியும் தெறித்து விழும். ஜெயப்ரதா எனும் பேரழகும் பெரு நடிப்பும் கொண்ட உன்னத நடிகையின் முக்கியமான படங்களில் உயிர்ப்பானதொரு படம் இது!

சைக்கிள் ரிக்‌ஷாக்காரருக்கு உதவியாக இறங்கிக்கொண்டு, தள்ளிக்கொண்டே வரும்போது, டைட்டில் முடியும். கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் கே.விஸ்வநாத் என்று கார்டு போடுவார்கள். அங்கிருந்து தொடங்கும் கமல், கே.விஸ்வநாத் கூட்டணியின் அதகள ஆட்டம்.

சரத்பாபு, கமலின் நண்பர். சரத்பாபுவின் மனைவியோ கமலுக்கு அம்மா மாதிரி. பரதத்தில் சகலமும் கற்றுத் தேர்ந்து பெரிய ஆளாக வரவேண்டும் எனும் ஆசை கமலுக்கு. ஆனால், நேரமும் காலமும் காசும் பணமும் வாய்க்கவேண்டுமே! அவரின் அம்மா சமையல் வேலை. ரயில்வே ஸ்டேஷனில், அம்மாவைப் பார்க்க கமலும் சரத்பாபுவும் வருவார்கள். ரயில் கிளம்பும்போது அம்மா செலவுக்குக் காசு தருவார். ரயில் கிளம்பும். ’‘வயசான அம்மாகிட்ட காசு வாங்குறியே. வெக்கமா இல்ல. நாம சம்பாதிச்சு அவங்களுக்குக் கொடுக்கணும்டா’’ என்பார் சரத்பாபு. உடனே ஒடிப்போய், அம்மாவிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘’அடுத்த மாசம் பணம் அனுப்பறேம்மா. உடம்பை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ’’ என்று சொல்லிவிட்டு மூச்சிரைக்க நிற்பார் கமல்.

தான் சொன்னதைக் கேட்ட நண்பனை நெகிழ்வுடன் அணைத்துக்கொண்டு நடப்பார் சரத்பாபு. ’’அம்மாகிட்ட பணம் அனுப்பறேன்னு சொல்லிட்டேன். எதாவது வேலை வாங்கிக் கொடுடா’’ என்பார் கமல். அங்கே நாம் நெகிழ்ந்து நிற்போம்!

போட்டோ ஸ்டூடியோக்கார பையனின் அலும்பு நம்மாலேயே தாங்கமுடியாது. பாவம்... கமல் எப்படித் தாங்குவார்? கமலை விதம்விதமாக போட்டோ எடுக்கிறேன் என்று, முதுகு, ஒற்றைக் கால், கன்னம் சொரியும் போது என்றெல்லாம் எடுத்து அசிங்கப்படுத்த, அதே காட்சிகளை கமலுக்குத் தெரியாமல் ஜெயப்பிரதா எடுத்திருப்பார். அந்தக் காட்சி, காமெடிக்கு காமெடி. ரசனைக்கு ரசனை. கவிதைக்குக் கவிதை!

கல்யாண மண்டபத்தின் சமையற்கட்டில் அம்மா முதன்முதலாகப் பார்க்கிற வகையில் கமல் ஆடுகிற பரத நாட்டியம், நம்மைக் கலங்கடித்துவிடும். கமலுக்கும் ஜெயப்ரதாவுக்குமான பழக்கம், நட்பாகி, அங்கே சொல்லாத காதலாக ஒளிந்துகொண்டிருக்க, சலங்கையின் ஒலியுடன் காதலும் ஜதி சொல்லிக்கொண்டே இருக்கும்.

சினிமாக்காரரிடம் சரத்பாபு அழைத்துச் செல்ல, அங்கே கீதாவுடன் கெட்ட ஆட்டம் போடும்போது, கமலின் கோபமான, வெறுப்பான ரியாக்‌ஷன். அப்ளாஸ் அள்ளிவிடும். பிறகு அந்த ஆவேசத்தை நடனமாடித் தீர்த்துக்கொள்வார். அந்த இடம் கமல் தன் நடிப்பாலும் நடனத்தாலும் மிரட்டிவிடுவார். அந்த இடத்தில்... கே.விஸ்வநாத் எனும் சிறந்த இயக்குநரின் முத்திரை பதிவாகியிருக்கும்.

’கதக்’ நடனத்தை கற்றுக்கொள்ள குருவிடம் சொல்லச் சொல்லி ஒரு பெண்ணிடம் ஜாடையில் சொல்வார் கமல். பணமில்லை, காசில்லை, வேலையில்லை, குருவுக்கு பணிவிடைகள் செய்து கழித்துக்கொள்கிறேன். கற்றுக்கொடுங்கள் என்பதை அபிநயத்திலேயே சொல்வார் கமல். அவரின் நடனமும் நடிப்பும் அங்கே கொடிகட்டிப் பறக்கும்.

ஜெயப்ரதாவின் மகளாக பின்னணிப் பாடகி எஸ்பி.ஷைலஜா. தன்னைப் பற்றி, தன் நடனம் பற்றி தப்பாக எழுதிவிட்டார் என்று கமல் மீது கோபப்பட, அங்கே, கமல் ‘பஞ்சபூதங்களும்’ என்பதற்கு ஒவ்வொருவிதமாக ஆடிக்காட்டுவார். அப்படி கால்தூக்கி ஆடும்போது, கால் காபி டபராக்கள் மீது பட்டு, அவை பறந்துசென்று, ஷைலஜாவின் காலடியில் விழுந்து ஒரு ஆட்டம் ஆடி ஓயுமே... அது நம்மூர் கே.பாலசந்தர் டச் போல, கே.விஸ்வநாத் டச்.

டெல்லியில் மிகப்பெரிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியத் திருவிழா. அந்த அழைப்பிதழைப் பார்த்தே மிரண்டுபோவார் கமல். ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவார். அவர்களைப் பற்றி விவரிப்பார். பிரமிப்பார். சிலாகிப்பார். கொண்டாடுவார். அப்படியே ஒவ்வொரு பக்கமாக அழைப்பிதழைத் திருப்பிக் கொண்டே வரும்போது, அங்கே, கமலின் புகைப்படம். அவரைப் பற்றிய குறிப்புகள்.

’’இவரும் பெரிய ஆளுதான் பாலு சார். ஒருநாள் பெரிய ஆளா வருவாரு’’ என்று ஜெயப்ரதா சொல்ல, அழுது, உருகி, நெகிழ்ந்து, நெக்குருகி நன்றி சொல்லத் தவித்து மருகுவார் கமல். அவ்வளவு நேர்த்தியான, யதார்த்தமான நடிப்பு. அடுத்து, டெல்லி விழா. முன்னதாக கமலின் ஆட்ட ரிகர்சல். ஆட்டம் முடிந்து ஆட்டோகிராப் கேட்டு சுற்றிக்கொள்ளும் கூட்டம் என கற்பனைக் காட்சி. சிரிக்கவும் வைக்கும்; வலிக்கவும் செய்யும். அம்மாவின் மரணம். இறக்கும் தருணத்தில், அம்மாவுக்கு முன்னே நின்று கொண்டு, சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் காட்சியில் கமலின் முக எக்ஸ்பிரஷன்கள், காலத்துக்கும் மறக்காது. அந்த வலிக்கெல்லாம் மருந்தேது?

ஒருவழியாக, சரத்பாபுவை அவர் காதலியுடன் சேர்த்துவைத்து, முதலிரவுக்கு அனுப்பிவிட்டு, கமலும் ஜெயப்ரதாவும் இருக்க, ரேடியோவில் பாட்டு ஒலிக்கும். ’மெளனமான நேரம்’. காதலும் ஏக்கமுமாக கமல் பார்க்க, ஜெயப்ரதா வேறு எங்கோ பார்த்துவிட்டு கமலைப் பார்ப்பார். உடனே கமல், வேறு எங்கோ பார்ப்பார். அதேபோல், கமலையே பார்த்துக்கொண்டிருப்பார் ஜெயப்ரதா. கமல் பார்க்கும்போது சட்டென்று வேறு எங்கோ பார்ப்பார். அந்தப் பாட்டு மொத்தத்திலும் கவிதை மாதிரி காட்சிகள் ராஜாங்கம் பண்ணும். ராஜாவும் ராஜாங்கம் பண்ணியிருப்பார். படம் முழுக்கவே ஜெயப்ரதாவின் புடவைகள் அனைத்தும் அழகு காட்டும். நிவாஸ் தன் கேமராவால், ஒவ்வொரு காட்சியையும் அள்ளியள்ளி, நமக்கு ஒற்றிக்கொள்வது போல் வழங்கியிருப்பார்.

முக்கியமாக, படத்தின் பின்னணி முழுக்கவே இளையராஜா, தன் இசையால் படத்தின் கனத்தையும் கவிதையும் காதலையும் கலையையும் உணர்த்திக் கொண்டே வந்து மெருகு கூட்டியிருப்பார்! கதாபாத்திரத்தின் தன்மையையும் கதையையும் உணர்ந்ததுடன் தெலுங்கு ‘லிப் மூவ்மென்ட்ஸ்’க்கு தகுந்தது போலவும் வசனம் எழுதியிருப்பார் பஞ்சு அருணாசலம்.

ஜெயப்ரதாவுக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருப்பதையும் பிரிந்திருப்பதையும் சொல்லும் இடம் கனமான கவிதை. நம்மை ரணப்படுத்திவிடும். பிறகு மனம் திருந்தி கணவர் திரும்பி வரும்போது கமலே சேர்த்துவைப்பார். ஒருபக்கம், கலையும் இல்லை; இன்னொரு பக்கம் காதலும் இல்லை. நொறுங்கிப் போகிற காட்சிகளில் பாலுவாகவே வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன்.

கடைசிக் காட்சியில் ஷைலஜாவின் ஆட்டத்துக்கு கைத்தட்டல் கிடைக்கும். முன்னதாக, குருவாக கமல் அறிமுகப்படுத்தப்படுவார். முன்பொரு முறை, கற்றுத்தரும்போது, கமலின் கையை காலால் மிதித்துவிடுவார் ஷைலஜா. அது நினைவுக்கு வந்ததும் மேடையில் பதறியபடி வணங்கும் காட்சியில் நம்மை வசமாக்கிக் கொள்வார் இயக்குநர் கே.விஸ்வநாத்.

படத்தின் முடிவில், பாலு என்கிற கமல், இறந்துவிடுவார். இறந்துவிட்ட கமலை, மேடையில் இருந்து, அரங்கில் இருந்து, சக்கரநாற்காலியில் வெளியே தள்ளியபடி, சரத்பாபு நடக்க, கொட்டியெடுக்கும் மழை. அப்போது ஓடிவரும் ஜெயப்பிரதா, கமலுக்கு, பாலு எனும் கலைஞனுக்கு நனையாமல் இருக்கக் குடை பிடிப்பார். பின்னணியில் நடன சங்கதிகள், தாளக்கட்டுகள், ஜதிகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். END என்று ஸ்கிரீனில் வரும். அடுத்து END என்கிற எழுத்துக்கு மேலே, NO என்று வரும். பிறகு, NO END எழுத்துகளுக்குக் கீழே FOR ANY ART என்று டைட்டில் வரும். அதாவது

NO

END

FOR ANY

ART என்கிற டைட்டிலுடன் ’சலங்கை ஒலி’ முடியும்.

கே.விஸ்வநாத் மறைவுக்கு (பிப்ரவரி 3) நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘கலாதபஸ்வி கே.விஸ்வநாத் மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், கலையின் அழியாத்தன்மையையும் நன்கு உணர்ந்தவர். எனவே, விஸ்வநாத்தின் கலை அவரது மறைவுக்குப் பிறகும் கொண்டாடப்படும். அது எப்போதும் ஆளும். அவரின் தீவிர ரசிகன் கமல்ஹாசன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மைதான். 1983-ம் ஆண்டு தமிழில் வெளியானது கே.விஸ்வநாத் எனும் அற்புதப் படைப்பாளியின் ‘சலங்கை ஒலி’. படம் வெளியாகி 40 ஆண்டுகளாகின்றன.

ஆனால், கே.விஸ்வநாத் எழுப்பிய ‘சலங்கை ஒலி’ நம் செவிப்பறைகளில் என்றென்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்! கே.விஸ்வநாத் சாகாவரக் கலைஞன் என்பதை இந்தப் படத்தைப் போலவே பறைசாற்றிக் கொண்டே இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in