பிரபல முன்னணி ஹீரோ படத்தை, முகத்தை மூடியபடி தியேட்டரில் ரகசியமாக நடிகை சாய் பல்லவி பார்த்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தியா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘மாரி-2’, ‘என்ஜிகே’ படங்களிலும், ‘பாவ கதைகள்’ எனும் வெப் தொடரிலும் நடித்தார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவரின், ‘விராட பர்வம்’ விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி முகத்தை நன்றாக மறைத்து, தியேட்டருக்கு சென்று படம் பார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான மகேஷ்பாபு நடித்து கடந்த வாரம் வெளியான படம், ’சர்க்காரு வாரி பாட்டா’.
வரவேற்பு பெற்றுள்ள இந்தப் படத்தை ஹைதாராபாத்தில் உள்ள ஆர்.கே.காம்ப்ளக்ஸில், நடிகை சாய் பல்லவி ரசிகர்களுடன் பார்த்துள்ளார். தான் யாரென்று தெரியாதபடி முகத்தை நன்றாக மூடி பார்த்துள்ளார். இருந்தாலும் தியேட்டருக்கு வெளியே அவரை அடையாளம் கண்டு சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகை சாய் பல்லவி, ஏற்கெனவே பர்தா அணிந்துகொண்டு ’ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தைத் தியேட்டரில் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.